கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடன இயக்குநருக்கு சிவசங்கரின் சிகிச்சை செலவுக்கு உதவுவதாக சோனு சூட் அறிவித்துள்ளார்.

இந்திய சினிமா உலகில் மூத்த நடன இயக்குநராகவும், நடிகராகவும் திகழ்ந்தவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி கன்னடம், நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் 1300 படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து உள்ளார். 

 ‘திருடா திருடி', ‘மகதீரா’, ‘பாகுபலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘மகதீரா’ படத்தில் ஒரு பாடலுக்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இது தவிர ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘தில்லுக்கு துட்டு’,‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

sivasankar

மேலும் ஜாப்பனீஸ் உட்பட 10 மொழிகளில் சிவசங்கர் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மாஸ்டர் சிவசங்கருடன் அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், டான்ஸ் மாஸ்டர் சிவசங்கருக்கு உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இவரின் சிகிச்சைக்கு அதிக செலவு ஆகும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால் சிகிச்சைக்கான கட்டணத்தை அவருடைய குடும்பத்தினரால் செலுத்த முடியவில்லை. 

சிவசங்கரின் சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்படுவதால் அவரது இளைய மகன் சமூக வலைதளங்களில் உதவி கோரியிருந்தார். இதனை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.

sonu sood

அதில் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கரின் இளைய மகன் கூறியிருப்பதாவது, “என்னுடைய அப்பா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். எங்களிடம் சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லை. அதனால் அவருக்கு தயவுசெய்து உதவுங்கள்” என வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இந்நிலையில் சிவசங்கர் மாஸ்டர் பற்றி தகவல் அறிந்த நடிகர் சோனு சூட் அவருக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார். இது குறித்து சோனு சூட் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, சிவசங்கரின் சிகிச்சைக்கு உதவி கோரும் ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “நான் ஏற்கெனவே அவர்கள் குடும்பத்துடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அவரது உயிரை காக்க என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

சோனுவின் ட்வீட்டை பார்த்தவர்களோ, யார் உதவி கேட்டாலும் செய்கிறார். யாராவது கஷ்டப்படுவது குறித்து அறிந்தாலே தாமாக முன்வந்து உதவுகிறார். அவர் இறைவன் அருளால்  நல்லா இருக்கணும் என்று வாழ்த்தியுள்ளனர்.