தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் தற்போது நடிகர்,தயாரிப்பாளர்,படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார். அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்குகிறார்.

முன்னதாக இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தமிழரசன், இயக்குனர் A.செந்தில்குமார் இயக்கத்தில் காக்கி மற்றும் மூடர் கூடம் பட  இயக்குனர் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் என விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படங்கள் விரைவில் இறுதிகட்ட பணிகளை முடித்து அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

தொடர்ந்து இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகும் கொலை மற்றும் இயக்குனர் விஜய்மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி அடுத்ததாக தமிழ் படம் படத்தின் இயக்குனர் சி.எஸ்.அமுதன் உடன் இணைகிறார்.

கோடியில் ஒருவன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் தயாரிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. கோடியில் ஒருவன், கொலை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக விஜய் ஆண்டனி நடிக்கும் இந்தத் திரைப்படத்தையும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.