உயர் கல்வி மாணவர்களுக்கான நேரடி செமஸ்டர் தேர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என தி.மு.க அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

EPSதமிழ்நாட்டில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று பல்வேறு தரப்பு மக்களையும் வாட்டி வருகிறது. இதற்கிடையில், கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால்,  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. மேலும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து வகை கல்லூரிகளுக்கும் ஆன்லைன் மூலமே செமஸ்டர் தேர்வும் நடைபெற்றது. இதில் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆன்லைன் தேர்வில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்நிலையில் அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது.

தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில் ஆன்லைன் கல்வியும் தொடர்கிறது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்திவிட்டு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக் கூடாது என்றும், ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் எனக் கோரியும் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

இதேபோல் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேரடி எழுத்துத் தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக உயர் கல்வித்துறையானது முக்கிய உத்தரவை இன்று பிறப்பித்திருக்கிறது.

இந்நிலையில் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுயுள்ள அறிக்கையில் தமிழ் நாட்டில் கொரோனா நோய்த் தொற்றின் சுமார் 20 மாதங்களுக்கும் மேலாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்காமல் மூடப்பட்டிருந்தன. சுமார் 15 மாதங்களுக்கு மேலாக ஆன்லைன் வகுப்புகள் கூட நடத்தப்படாமல் இருந்தன. பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடைசி ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன எனறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

மேலும் கொரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, இந்தியாவில் வசிக்கும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறையை கட்டாயமாக்கியது. இதன்படி தமிழ் நாட்டிலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும் வகையில் 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இச்சூழ்நிலையில் கல்லூரிகள் திறந்து சுமார் இரண்டரை மாதங்களே ஆனதாலும், முழு யாக நேரடி வகுப்புகள் நடைபெறாததாலும், பண்டிகைக் காலம், பருவ மழை என்று கல்லூரிகளுக்கு அடிக்கடி விடுமுறை அளிக்கப்படுவதாலும், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த செமஸ்டருக்குரிய பாடங்களை ஆசிரியர்கள் முழுமையாக முடிக்கவில்லை என்றும், எனவே, செமஸ்டர் தேர்வுக்கு முன் நடத்தப்படும் மாதிரி தேர்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை என்றும் மாணவர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த செமஸ்டருக்கான சிலபஸ் இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை என்றும், டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் மாதம் என்ன பாடம் நடத்தப்பட வேண்டும் என்ற பாடத் திட்டம் (சிலபஸ்) கல்லூரி பேராசிரியர்களுக்குக் கூட இதுவரை வழங்கப்படவில்லை என்றும், எனவே இந்த செமஸ்டருக்குண்டான பாடங்களை முழுமையாக எங்களுக்கு ஆசிரியர்கள் நடத்தவில்லை என்றும், மேலும் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகள் முழுமையாக நடைபெறவில்லை என்றும் மாணவர்கள் தெரிவித்ததாக  செய்திகள் வெளி வந்துள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 

இந்நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக பல மாவட்டங்களில் மாணவர்கள் நேரடி தேர்விற்கு தங்களது எதிர்ப்பைக் காட்டி, இந்த முறையும் ஆன்லைன் தேர்வுகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை அரசுக்கு வைத்து, வகுப்பை புறக்கணித்து, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். எனவே, அனைத்து கல்லூரி மாணவ, மாணவியரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனரா? என்றும், அனைத்து மாணவர்களும் கல்லூரிகளுக்கு வந்து பாடம் கற்கிறார்களா? என்பதையும் இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் நேரடி தேர்வு நடத்தினால் தான் மாணவச் செல்வங்கள் முழு திறமையோடு தேர்வை எதிர்கொள்ள முடியும். 

அதனைத்தொடர்ந்து இந்த அரசு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையினை பரிசீலித்து, போதிய நேரடி வகுப்புகள் நடைபெறாததாலும், இந்த செமஸ்டருக்குண்டான பாடத் திட்டம்  இதுவரை வழங்கப்படவில்லை என்பதையும், இந்த செமஸ்டருக்குண்டான பாடங்களை மாணவர்களுக்கு முழுமையாக நடத்தி முடிக்க முடியவில்லை என்பதையும், மாதிரித் தேர்வுகள் நடைபெறாததையும், அனைத்து மாணவர்களும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கல்லூரிக்கு வருகிறார்களா? என்பதை உறுதி செய்ய இயலாத நிலையையும் கருத்திற்கொண்டு, நடைபெற உள்ள இந்த ஒரு செமஸ்டர் தேர்வுகளை மட்டும் நேரடித் தேர்வாக நடத்தாமல், ஆன்லைன் தேர்வாக நடத்திட வேண்டும் என்றும், மாணவ, மாணவியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்று  அறிக்கையில் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.