“ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் அது போக்சோ சட்டத்தின் கீழ் வராது” என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த சதீஸ் என்பவர், 12 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று அவருக்கு உணவுப் பொருட்களைக் கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சதீஸ் என்பவரை அதிரடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இது தொடர்பான வழக்கு அங்குள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், “இந்த வழக்கில் தனது ஆடைகளைக் களைய முயன்ற அந்த நபர், மார்பகங்களை அழுத்தி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார்” என்று, பாதிக்கப்பட்ட 12 வயதான சிறுமி நீதிமன்றத்தில் பரிதாபமான முறையில் வாக்குமூலம் அளித்தார். 

இந்த வழக்கை விசாரித்த நாக்பூர் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், “குற்றம் சாட்டப்பட்ட சதீசுக்கு போக்சோ சட்டத்தின் கீழ், ஐபிசி 354 வது பிரிவின் கீழ் 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை” மட்டுமே விதித்தது.

அத்துடன், இந்த வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, குற்றவாளியான சதீஸ், நாக்பூர் உயர் நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தார். 

இந்த வழக்கை விசாரித்த நாக்பூர் அமர்வு நீதிபதி புஷ்பா கனேடிவாலா, கடந்த 19 ஆம் தேதி குற்றவாளி என செஷன்ஸ் நீதிமன்றம் அறிவித்த நபரைக் குற்றமற்றவர் என்று, தீர்ப்பளித்து விடுதலை செய்தார்.

குறிப்பாக, தன்னுடைய தீர்ப்பில், “12 வயது சிறுமியின் ஆடைகளைக் களையாமல், அந்தச் சிறுமியின் மார்பகங்களைப் பிடிப்பதும், தொடுவதும் பாலியல் துன்புறுத்தலில் சேராது” என்றும் அப்போது, அந்த நீதிபதி விளக்கம் அளித்திருந்தார்.

முக்கியமாக, “இது, போக்சோ சட்டத்திலும் வராது என்றும், ஐபிசி 354 வது பிரிவில் மட்டுமே இந்த குற்றம் வரும் என்றும், அதற்குக் குறைந்த பட்சமாக ஓராண்டு சிறை மட்டுமே வழங்கலாம்” என்ற, அதிர்ச்சி அளிக்கும் தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி வழங்கினார். 

மேலும், “12 வயதுச் சிறுமியின் மேல் ஆடையை அகற்றாமல் அந்த குற்றச் செயலில் ஈடுபட்டதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும், அந்தச் சிறுமியின் மேல் ஆடைக்குள் கையை நுழைத்தாலும் அது பாலியல் வன்கொடுமையில் வராது என்றும், பாலியல் வன்கொடுமை என்பது, ஆடைகள் இன்றி, உடலோடு உடல் தொடர்பு கொள்வது தான்” என்றும் விளக்கம் அளித்த அந்த நீதிபதி, “ஆதலால், அந்தச் சிறுமியின் மேல் ஆடையை அகற்றாமல் தொட்டதால், அது பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது” என்றும், நீதிபதி விளக்கம் அளித்தார்.

அத்துடன், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை நான் விடுவிக்கிறேன் என்றும், அவர் ஏற்கெனவே போதுமான அளவு சிறை தண்டனையை அனுபவித்துவிட்டார்” என்றும், அந்த நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு, சட்ட நிபுணர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

முநாக்பூர் நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சைக்குரியதாக மாறிய நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவை சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த நிலையில் தான், இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, “ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை என்ற மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து” அதிரடி உத்தரவை பிறப்பித்தது.