டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் மத்திய அரசு நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. 

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் முற்றுகை போராட்டம் தற்போது ஒரு மாதத்தைக் கடந்திருக்கிறது. 

இதனால், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே 5 முறை பேச்சு வார்த்தைகள் நடத்தியது. ஆனால், அது அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தது. 

இதனையடுத்து, மத்திய அரசின் அழைப்பைப் பரிசீலித்த சுமார் 40 விவசாய அமைப்புகள், இது குறித்து ஆலோசனை நடத்தினர். நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு, அடுத்த சுற்று பேச்சு வார்த்தையில் பங்கேற்க அவர்கள் சம்மதம் தெரிவித்து உள்ளனர். 

அதன் படி, 6 ஆம் கட்ட பேச்சு வார்த்தையானது வரும் 29 ஆம் தேதி இன்றைய தினம் நடத்த மத்திய அரசுக்கு விவசாய அமைப்புகள் கடிதம் எழுதி இருந்தன. 

அத்துடன், வேளாண் சட்டங்களை நீக்குவது தொடர்பாக ஆலோசனை போன்றவற்றை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டும் எனவும் அவர்கள் புதிய நிபந்தனை விதித்தனர்.

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் 6 ஆம் கட்ட பேச்சு வார்த்தை நடத்த நாளை தினம் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. 

இந்த பேச்சு வார்த்தையானது, டெல்லி விஞ்ஞான் பவனில் நாளை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் என்றும், கூறப்படுகிறது.

இது தொடர்பாக விவசாய அமைப்புகளுக்கு மத்திய வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வால் விடுத்துள்ள அழைப்பில், “வேளாண் சட்டங்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தர்க்க ரீதியான தீர்வை கண்டடைவதில் அரசு திறந்த மனதுடனும், தெளிவான நோக்கத்துடனும் இருக்கிறது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், இந்த பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து சஞ்சய் அகர்வால் தனது கடிதத்தில், “3 வேளாண் சட்டங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை, மின்சார திருத்த மசோதா, டெல்லி மற்றும் தலைநகர் பகுதியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கான அவசர சட்டம் போன்றவை குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படும்” என்று மட்டுமே குறிப்பிட்டு இருந்தார். ஆனால், விவசாய அமைப்புகள் நிபந்தனை விதித்திருந்த, 3 சட்டங்களைத் திரும்பப்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எந்த தகவலும் அதில் இடம் பெறவில்லை.

வேளாண் சட்டங்கள் தொடர்பான பேச்சு வார்த்தையை 29 ஆம் தேதி நடத்துமாறு விவசாயிகள் கூறியிருந்த நிலையில், மத்திய அரசு 30 ஆம் தேதியை தேர்வு செய்து இருக்கிறது. அந்த நாளில், விவசாயிகள் டெல்லியின் சிங்கு, திக்ரி எல்லைகளில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டு இருக்கிறது. 

மேலும், வேளாண் சட்டங்கள் தொடர்பான முட்டுக்கட்டைகளுக்கு விரைவில் நல்ல தீர்வு காணப்படும் என வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதனிடையே, மத்திய அரசின் அழைப்பின் நோக்கம் குறித்து மத்திய அரசு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.