மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து, டெல்லியின் எல்லை பகுதியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்துக்கு விவசாயிகள் மேற்கொண்ட ட்ராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இதனால் விவசாயிகளின் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. பல்வேறு சர்வதேச பிரபலங்கள் விவசாய போராட்டம் குறித்து கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். 


இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து பதிவிடுபவர்கள், விவசாயிகள் இனப்படுகொலை என்பதைக் குறிக்கும் வகையில் #farmers genocide என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திவருகின்றனர்.  இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கான பிறகு மத்திய அரசு, ட்விட்டர் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. இதனால் இந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திய ட்விட்டர் கணக்குகளை சஸ்பெண்ட் செய்யப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே சஸ்பெண்ட் செய்யப்பட்ட கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் மீண்டும் செயல்பட அனுமதித்தது.


இதனால் மத்திய அரசு , ட்விட்டர் நிறுவனத்துக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், ‘அரசின் உத்தரவுக்கு கீழ் படிவது ட்விட்டர் நிறுவனத்தின் கடமை. ட்விட்டர் நிறுவனம் இடைத்தரகராக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.  அரசின் உத்தரவை பின்பற்ற மறுத்தால் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும்.


கோபம் மற்றும் வெறுப்பை தூண்டும் வகையிலான ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு, சமூகத்தில் அசாதாரண சூழலை உருவாக்கும் வகையில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது பேச்சு சுதந்திரம் அல்ல “ என்று தெரிவித்துள்ளது.