தமிழக அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி இருப்பதற்காக, தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. மேலும் பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்களாக சென்னை மற்றும் கோவை ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. 
திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தியதற்காக மத்திய அரசு, தமிழக அரசுக்கு விருது வழங்கி கெளரவித்துள்ளது.

பெண்கள் மேம்பாடே குடும்பத்தின் மேம்பாடு அதுவே மாநிலத்தின் மேம்பாடு என்ற நோக்கத்தோடு செயல்படுத்தப்படும் இந்த திட்டங்களால் தமிழக பெண்கள் தங்களது வாழ்வில் வெற்றி நடை போடும் நிலைக்கு உயர்ந்துள்ளனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


’’பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய “காவலன் செயலி” மற்றும் அம்மா ரோந்து வாகனங்கள்  என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் மூலம் இதுவரை 2.85 லட்சம் மகளிர்க்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கறவை மாடுகள் மற்றும்  வெள்ளாடுகள்/ செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 1, 11, 444 கறவை மாடுகளும் 52, 88, 608 ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளனர். 


மேலும் ’’அதிமுக ஆட்சியில் பெண்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள்:
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 50 ஆயிரம் ரூபாய் வரை வைப்பு நிதியாக 10 லட்சம் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெண் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு மூன்று மாதங்களிலிருந்து 9 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.


வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 740 கோடி ரூபாய் மானியத்தில் 2.85 லட்சம் இருசக்கர வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த 25 லட்சம் தாய்மார்களுக்கு 15 பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தைகள் நலப்பெட்டகம் வழங்கப்பட்டு இருக்கிறது.


மகளிரின் பொருளாதாரத்தை மேம்படுத்திட மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 45,77, 484 பெண்களுக்கு 81,052  கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக காவல்துறையில் சிறப்பு குற்றப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. 


காவல்துறையில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மகளிர் உடல் நலம் பேண அம்மா முழு உடற்பரிசோதனை மற்றும் மகளிர் முழு உடற்பரிசோதனை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.