ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரிப்பால் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்க கூடாது என்று தமிழக அரசுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதி உள்ளது.

jallikattu

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் தென் ஆப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தமிழ்நாடு, மராட்டியம் உள்பட சில மாநிலங்களில் இந்த தொற்று தடம் பதித்துள்ளது. மேலும் கொரோனாவை காட்டிலும் ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவக் கூடிய கிருமி என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

அதனைத்தொடர்ந்து  ஒமைக்ரான் தொற்று பரவலை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி புத்தாண்டு அன்று நள்ளிரவு சென்னையில் மெரினா உள்பட கடற்கரை பகுதிகளில் மக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு அந்த அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி மணிலால் வல்லியத்தே கடிதம் எழுதி உள்ளார். அதில் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு 2017-ம் ஆண்டு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியதில் இருந்து இதுவரையில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 696 பேர் காயம் அடைந்துள்ளனர். 22 காளைகள் பலியாகி உள்ளன.

மேலும் தற்போது ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல் உள்ளது. கொடிய வைரஸ் தொற்றுடன் நாடே போராடி வரும் சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு போன்ற அத்தியாவசியமற்ற போட்டிகளுக்கு இடம் அளிக்க கூடாது. எனவே மருத்துவர்களின் தொழில்முறை கருத்துகளுக்கு செவிசாய்த்து, பொதுமக்களை ஆபத்தான நோயில் இருந்து காக்கவும், காளைகளை கொடுமைகளில் இருந்து காக்கவும் ஜல்லிக்கட்டு போட்டியை கைவிடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த கொரோனா வைரஸ் உருமாற்றம் பொதுமக்களுக்கு கடுமையான உடல்நல அபாயத்தை ஏற்படுத்த கூடும் என்பதால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி தரக்கூடாது என்று தமிழக மக்கள் மற்றும் மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு 80 டாக்டர்கள் வேண்டுகோள் விடுத்து கடிதம் அனுப்பி உள்ளனர். இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள டாக்டர்களில் ஒருவரான டாக்டர் தீப்ஷிகா சந்திரவன்ஷி கூறும்போது மக்கள் அதிகமாக கூடும் ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும். இதன் மூலம் ஒமைக்ரான் பரவலை தடுக்க முடியும். பொது சுகாதாரத்தை பேணி காக்க முடியும். டாக்டர்கள் மீதான அழுத்தத்தை குறைப்பதற்கு உறுதுணையாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.