காதலிக்க மறுத்தப் பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு, தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் தற்போது உயிரிழந்து உள்ளார்.

கேரள மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ள திகோடியைச் சேர்ந்த 22 வயதான இளம் பெண் சிந்தூரி என்ற கிருஷ்ணப் பிரியா, படித்து முடித்துவிட்டு, அங்குள்ள திகோடி பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக கடந்த 8 நாட்களுக்கு முன்பு சேர்ந்து உள்ளார்.

அதே நேரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதான நந்தகுமார் என்ற இளைஞர், கடந்த சில மாதங்களாகவே இளம் பெண் கிருஷ்ணப் பிரியாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அந்த பெண் செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து சென்று, அந்த பெண்ணுக்கு காதல் டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், அந்த பெண் இந்த இளைஞனின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிகிறது.

இப்படியாக, ஒரு கட்டத்தில் அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பும் தனது காதலை இளம் பெண் கிருஷ்ணப் பிரியாவிடம் தெரிவித்த நிலையில், அந்த பெண் இவரது காதலை ஏற்க மறுத்து விட்டார். ஆனாலும், இருந்தும் தொடர்ந்து கிருஷ்ணப்பிரியாவை அவர் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், திகோடி பஞ்சாயத்து அலுவலகத்துக்கு இளம் பெண் கிருஷ்ணப் பிரியா வழக்கம் போல், நேற்று காலை வந்திருக்கிறார்.

அப்போது, இந்த இளம் பெண்ணை பின் தொடர்ந்து நந்தகுமாரும் வந்திருக்கிறார். 

அப்போது, மீண்டும் “தனது காதலை ஏற்கும்படி” நந்தகுமார் வற்புறுத்தி இருக்கிறார்.

ஆனால், அந்த இளம் பெண் எப்போதும் போல் காதலை ஏற்க மறுத்துவிட்டு அந்த இளைஞனை திட்டியிருக்கிறார். 

இதனால், கடும் ஆத்திரமடைந்த நந்தகுமார், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை திடீரென அந்த இளம் பெண் மீது ஊற்றி, கண் இமைக்கும் நேரத்திறகுள் தீவைத்து எரித்து உள்ளார். 

இதனால், தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், அலறி துடித்த அந்த இளம் பெண், அடுத்த சில நொடிகளிலேயே அங்கேயே அவர் சரிந்து விழுந்தார். 

இதனையடுத்து, அந்த பஞ்சாயத்து அலுவகத்தின் வெளியே வந்த நந்தகுமார், தனது மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். 

அப்போது, அவரது உடலில் தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில், அவரும் அலறி துடித்து உள்ளார். இந்த அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து தீயை அணைத்து இருவரையும் மருத்துவமனையின் சேர்த்தனர்.

மருத்துவமனையில் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணப் பிரியா உயிரிழந்தார். ஆனால்,  நந்தகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நந்தகுமாரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமக உயிரிழந்து உள்ளார்.

இந்த சம்பவம், கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, ஒரு தலை காதல் மற்றும் வரதட்சணை கொடுமை காரணமாக கேரளாவில் பெண்கள் கொல்லப்படுவது சமீப காலமாக அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.