“இளம் பெண்களை வீட்டில் வைத்து காலம் தாழ்த்த கிராம‌ப்புறங்களில் விரும்புவதில்லை” என்று, மத்திய அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், தகவல் தெரிவித்துள்ளார்.

அதாவது, “பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை சமீபத்தில்  ஒப்புதல் அளித்தது. 

அத்துடன், இந்த திட்டம் மசோதாவாக விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாகவும் அமலுக்கு வர உள்ளன.

இந்த நிலையில் தான், “ஆண்களுக்கான திருமண வயதும் 21 தானா? என்பது குறித்தும், மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி இருக்கிறார்.

இது குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “பெண்களின் திருமண வயதை 18 ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தை தேமுதிக வரவேற்கிறது” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

“இதன் மூலம் கல்வி, வேலை வாய்ப்பில் பெண்கள் முன்னேற்றம் அடைவதுடன், அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்கள் பக்குவம் அடைவார்கள்” என்றும், கூறியுள்ளார். 

அத்துடன், “சுலபமாக சிந்தித்து எதிர்கால வாழ்க்கையை அவர்களால் சுமூகமாக வழி நடத்திட முடியும்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் “பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், வரதட்சணை கொடுமைகள், விவாகரத்துகள் தற்போது அதிகரித்து வருவதாகவும், இதிலிருந்து அவர்களை பாதுகாத்திடும் பொருட்டு கிராமப்புற மக்கள் 18 வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்ய விரும்புகின்றனர்” என்றும், அவர் சுட்டிக்காட்டிார்.

குறிப்பாக, “இளம் பெண்களை வீட்டில் வைத்துக்கொண்டு காலம் தாழ்த்த கிராமப்புற மக்கள் விரும்புவதில்லை என்றும், எனவே பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் விவகாரத்தில் மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்த பின்னர் மத்திய அரசு அரசாணை வெளியிட வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டார். 

“இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கை அடங்கி உள்ளதால் மத்திய அரசு தீர்க்கமான நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என்றும், அவர் வற்றுத்தி கேட்டுக்கொண்டு உள்ளார்.

“ஓட்டுரிமைக்கு 18 வயது, திருமணத்திற்கு 21 வயதா என என்ற கேள்வி மக்களிடையே எழுந்து உள்ளது போல், ஆண்களுக்கான திருமண வயது 21 தானா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதனால், “ஆண்களுக்கான வயது வரம்பில் மாற்றம் வருகிறதா என்பது குறித்தும் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்றும், விஜயகாந்த் மத்திய அரசை கேட்டுக்கொண்டு உள்ளார்.