“தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வரும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்” என்று, தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொது மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில், கடந்த காலங்களில் கலைஞர் முதல்வராக இருந்தபோது, 'பொங்கல் பரிசு' வழங்கும் திட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். 

அப்போது, 'சுமார் 1 கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், பருப்பு உள்ளிட்ட பொங்கல் தயாரிக்கும் பொருட்கள்' இலவசமாக வழங்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் பொங்கல் தொகுப்பை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, “வரும் 2022 ஆம் ஆண்டுக்கான தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

அதன்படி, பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு 21 மளிகை பொருட்கள் அடங்கிய துணிப்பை (தொகுப்பானது) வழங்கப்படுகிறது.

இந்த 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பானது தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2,15,48,060 குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்றும், இதற்காக மொத்தம் 1,088 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது” என்றும், தமிழக அரசு கூறியிருந்தது.

அத்துடன்,“இந்த ஆண்டு இன்னும் கூடுதலாக ஒரு முழு கரும்பும் வழங்கப்படும்” என்றும், அறிவிக்கப்பட்டு இருந்தது. 

கரும்பு வாங்க மட்டும் கூடுதலாக 71 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு, பொது மக்களும், விவசாய சங்கங்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அப்போது நல்ல வரவேற்பு தெரிவித்தனர். 

இவற்றுடன், 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்குவதற்கான நிதியும் தமிழக அரசு அப்போதே ஒதுக்கியது. 

இதைத்தொடர்ந்து, பொங்கல் தொகுப்பு கொள்முதல் செய்யும் பணிகளில் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் முழுவீச்சில் தற்போது ஈடுபட்டு உள்ளனர்.

தமிழகம் முழுவதும் பொங்கல் தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான், “தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வருகிற 2022 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி முதல் அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்” என்று அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.