“ராஜேந்திர பாலாஜி வழக்கு குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று,  ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ள நிலையில், “முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இல்லை” என்று, ஜெயக்குமார் தடாலடியாக கூறியள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் அதிமுக நிர்வாகி விஜய நல்லதம்பி பல்வேறு நபர்களுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடமும், அவரது உதவியாளரிடமும் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்திருந்ததாகவும், இது தவிர அதிமுக கட்சி பணிகளுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் என மொத்தம் 3 கோடியே 10 லட்சம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

ஆனால், “பணத்தை பெற்றுக்கொண்டு அதற்கு அரசு வேலையும் வாங்கித்தராமல், வாங்கிய பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்து விட்டதாக” முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி ஆகிய 4 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

இது தொடர்பாக கடந்த மாதம் 15 ஆம் தேதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று காலை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

அந்த தருணத்தில் நேற்று காலை விருதுநகரில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

அத்துடன், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தற்போது 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

இந்த நிலையில் தான், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணன், கார் ஓட்டுநர் ராஜ் குமார் ஆகியோரை போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்து உள்ளனர். இந்த நேரத்தில் தான், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது. இது, அதிமுக வட்டாராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராஜேந்திர பாலாஜி வழக்கு குறித்து கருத்து கூற விரும்பவில்லை” என்று, வெளிப்படையாகவே தெரிவித்தார்.

மேலும், “ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டு, நீதிமன்றத்தில் வழக்காக நிலுவையில் உள்ளது என்றும், நீதிமன்ற கட்டுப்பாட்டில் அது இருப்பதால், அது குறித்து நான் கருத்துக்கூற விரும்பவில்லை” என்றும் கூறி, அவர் நழுவிவிட்டார்.

அதே நேரத்தில், சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சற்று முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த போது, “தமிழுக்கு எந்த தொண்டும் ஆற்றாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அறிவித்துள்ளது திமுக அரசு” என்று, குற்றம்சாட்டினார்.

“உண்மையிலேயே தமிழுக்கு தொண்டாற்றியது எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தான்” என்றும் குறிப்பிட்ட ஜெயக்குமார், “ராஜேந்திரபாலாஜி தலைமறைவாக இல்லை என்றும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார்” என்றும், தெரிவித்தார்.

மேலும், “ராஜேந்திரபாலாஜிக்கு அதிமுக துணை நிற்கும்” ஜெயக்குமார் தெரிவித்தார்.