திருமணமாகாத 17 வயது மாணவி, குழந்தை பெற்றெடுத்த நிலையில், திடீரென்று உயிரிழந்து உள்ளார்.

தேனி மாவட்டம் போடி அடுத்து உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், தாய் - தந்தை இல்லாத நிலையில், தன்னுடைய தாத்தா - பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

தேனியில் 12 ஆம் வகுப்பு வரை படித்து வந்த அந்த மாணவி, மேல் படிப்பிற்காக கரூர் மாவட்டத்தில் உள்ள செவிலியர் கல்லூரியில் தற்போது இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். அப்போது, ஒரு இளைஞரை அந்த மாணவி காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த மாணவிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, அந்த மாணவி அங்குள்ள போடி அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமனையில் அந்த மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த மாணவி கர்ப்பமாக இருப்பதாகவும், அவருக்கு வந்தது வயிற்று வலி கிடையாது என்றும், மாறாக அது பிரசவ வலி என்றும் கூறி உள்ளனர். இதனைக் கேட்டு, மாணவியை அழைத்துச் சென்றவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

அத்துடன், அந்த மாணவிக்கு பிரசவ வலி அதிகமாகவே, அவருக்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது, அந்த மாணவிக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. 

முக்கியமாக, மாணவிக்கு பிரசவத்திற்குப் பின்னர் ரத்தப்போக்கு அதிகமாகி உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. 

இதனால், உயர் சிகிச்சைக்காக அந்த மாணவியும், குழந்தையும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு, அந்த மாணவிக்குத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, ஆனாலும், அந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அத்துடன், பிறந்த குழந்தையை மாவட்ட குழந்தைகள் மையத்தில் சேர்க்கப்பட்டு இன்குபேட்டர் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதே போல், உயிரிழந்த மாணவியின் நிலைமை குறித்து, அந்த மாணவியின் தாத்தா - பாட்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நேரில் வந்து பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள், “தங்கள் ஊரைச் சேர்ந்த 2 இளைஞர்கள் எனது பேத்தியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு வைத்திருக்கலாம்” என்று சந்தேகப்படுவதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்து போடி ஊரக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, சம்மந்தப்பட்ட 2 இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், அந்த இரு இளைஞர்களையும், டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.