கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞனை, அதே கத்தியால் இளம் பெண் ஒருவர் குத்திக்கொன்றதால் கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. 

இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் தமிழ்நாட்டில், அதுவும் திருவள்ளூர் மாவட்டத்தில் தான் நிகழ்ந்து உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்து உள்ள ஒரக்காடு அல்லிமேடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் 25 வயதான அஜித், அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் பெண்ணான 19 வயதான கௌதமி மீது ஆசைப்பட்டு உள்ளார். இந்த ஆசை அவருக்குள் அதிகரித்த நிலையில், அது சபலமாக மாறி உள்ளது. 

அப்போது, நேற்று இரவு நேரத்தில், கௌதமி வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அந்த பெண் மட்டும் தனிமையில் இருந்துள்ளார். இதனைத் தெரிந்துகொண்ட அஜித், நேற்று நள்ளிரவு நேரத்தில், உறவினர் பெண்ணான கௌதமி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அப்போது, அஜித் தனது உறவினர் என்பதால், அவரை எச்சரித்து வெளியே போகும் படி சத்தம் போட்டு உள்ளார். ஆனால், துளியும் பயம் இல்லாத அஜித், தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி கௌதமியிடம் தவறாக நடக்க முயன்று உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கௌதமி, சத்தம் போட்டு கூச்சலிட்டு உள்ளார். ஆனால், அது இரவு நேரம் என்பதால் உதவிக்கு யாரும் விரவில்லை.

அதே நேரத்தில், கௌதமியிடம் அஜித் எல்லை மீறி அவரை பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியில், அஜித்திடம் இருந்த தன்னை தற்காத்து கொள்வதற்காக, அவனிடமிருந்து கத்தியைப் பிடுங்கி அவரை சரமாரியாகக் குத்தி உள்ளார். இதில், அஜித்திற்கு அதிக அளவிலான ரத்தம் வந்துள்ளது. இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்த அஜித், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, காலையில், அங்குள்ள சோழவரம் காவல் நிலையத்திற்குச் சென்ற இளம் பெண் கௌதமி, தனக்கு நள்ளிரவில் நடந்த இந்த பாலியல் பலாத்கார முயற்சி சம்பவத்தைக் கூறி, அந்த இளைஞனை கத்தியால் குத்தியபோது, அவன் உயிரிழந்ததையும் கூறி சரண் அடைந்து உள்ளார். 

இதனால், சற்று அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த பெண் உடன் அவரது வீட்டிற்குச் சென்று, உயிரிழந்த அஜித்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சோழவரம் காவல் துறையினர், சம்மந்தப்பட்ட இளம் பெண்ணின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அத்துடன், “இளைஞன் அஜித் எதற்காக கொலை செய்யப்பட்டார்? பாலியல் பலாத்கார முயற்சியின் போது நடந்த கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் சோழவரம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை” மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கொலை நடந்த இடத்தில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.