கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தது. அதன்பின்பு பலக்கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் திரையரங்குகளுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையான நஷ்டம் சந்தித்து இருப்பதாகவும், விரைவில் 100% இருக்கைகள் அனுமதியுடன் திரையரங்குகளுக்கு திறக்க அனுமதி அளிக்கப்பட்ட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசிடம் அனுமதி கோரி வந்தனர். 


மத்திய அரசு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம் என அனுமதியளித்தது. ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணமாக, தமிழகத்தில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது. 


சமீபத்தில் நடிகர் விஜய்யும், முதல்வர் பழனிசாமியை சந்தித்து, மாஸ்டர் படம் ரிலீசை முன்னிட்டு பொங்கலுக்கு திரையரங்குகளை  100% இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து இருந்தார். 


இந்நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அது தொடர்பான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.