ஒமிக்ரான் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் என்று அமெரிக்க தொற்று நோய் நிபுணர் மற்றும் வெள்ளை மாளிகையின் முதன்மை மருத்துவ ஆலோசகருமான டாக்டர் ஆண்டனி ஃபவுசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. ஒரே நாளில் 12,03,351 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 28,31,53,896 பேராக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனாவால் 6,496 பேர் மரணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 1,792 பேர் மரணமடைந்துள்ளனர். ரஷ்யாவில் 935 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

fauci omicron USஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 3,05,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,41,41,401 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா முழுவதும் கொரோனாவால் மொத்தம் 8,41,977பேர் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது.

இந்நிலையில் ஒமிக்ரான் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் என்று அமெரிக்க தொற்று நோய் நிபுணர் மற்றும் வெள்ளை மாளிகையின் முதன்மை மருத்துவ ஆலோசகருமான டாக்டர் ஆண்டனி ஃபவுசி தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான்  பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-

“அதிவேகமாக பரவக்கூடிய ஒமிக்ரான் வைரஸ், டெல்டா வகை கொரோனா வைரசை மிஞ்சிவிட்டது. ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட முக்கால்வாசி கொரோனா பாதிப்புகள் ஒமிக்ரானால் ஏற்படுகிறது.

அமெரிக்காவில் கடந்த வாரத்தில் சராசரியாக ஒன்றரை லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தினம் தினம் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக் கொண்டே போகும்.

ஒமிக்ரான் தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலைமை குறைவாகவே ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்தாலும், பொதுமக்கள் அதனை எளிதாக எண்ணி நடந்து கொள்ளக்கூடாது. 

omicron covid US Fauciமிக அதிக எண்ணிக்கையில் பாதிப்புகள் அதிகரிக்கும் போது, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை அதிகரிக்கக்கூடும். 

அமெரிக்க மக்கள் இப்போது விடுமுறை காலம் என்பதால்  ஒமிக்ரான் மற்றும் கொரோனாவுக்கு எதிராக தாங்கள்  பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய விரும்புகின்றனர். 

இப்போதைய சூழ்நிலையில் ஒவ்வொருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியாது. அனைத்து மக்களுக்கும் பரிசோதனை செய்வதில் சில சிரமங்கள் உள்ளன. 

அந்தப் பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும். அமெரிக்காவில் 61.7 சதவீதம் மக்கள் தான் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் ” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனிடையே ஒமிக்ரான் காரணமாக போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா, மொசாம்பிக், ஜிம்பாப்வே, நமீபியா, எஸ்வாடினி, லெசோதோ மற்றும் மாளவி ஆகிய 8 தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நுழைய விதித்திருந்த தடையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரத்து செய்துள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.