ஜார்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விலை அதிரடியாக 25 ரூபாயக குறைக்கப்பட்டு உள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விற்கப்பட்டு வருகின்றன.

இவற்றுடன், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றால், இந்தியாவே பொது முடக்கத்தில் முடங்கி இருந்த சூழலிலும் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி இருந்த போதிலும், இந்தியாவின் பொருளாதாரம் மிக கடுமையான அளவில் பாதிக்கப்பட்டது.

இதனால், மத்திய - மாநில அரசுகளுக்கு மிகப் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. அப்போது கூட பெட்ரோலுக்கான மதிப்பு கூட்டு வரி, 28 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும், டீசல் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் கடந்த அதிமுக தலைமையிலான அதிமுக அரசு தமிழகத்தில் உயர்ந்தியது. 

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது. இப்படியாக, தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயர்ந்து 100 ரூபாயை தாண்டி விற்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து, தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்த திமுக அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் விலை 3 ரூபாய் வரை குறைத்தது.

ஆனாலும், தமிகத்தில் மீண்டும் 100 ரூபாயை தாண்டி பெட்ரோல் டீசல் விலை தற்போது வரை விற்பனையாகி வருகிறது.

அதே போல், இந்தியாவின் இன்னும் சில மாநிலங்களில் பெட்ரோலின் விலை 110 ரூபாயை தாண்டி விற்க, இந்திய வரலாற்றில் முதன் முறையாக டீசல் விலையும் 100 ரூபாயைக் கடந்தது.

இதனால், அன்றாட விற்கும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிரடியாக உயர்ந்ததால், அடிதட்டு சாமன்ய மக்கள் பலரும் சிரமப்பட்டனர். 

முக்கியமாக, சமீப காலங்களில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க எதிர்க் கட்சிகள் எல்லாம் போராட்டம் நடத்தியும் கண்டுகொள்ளாத மத்திய அரசு, சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததால், மறுநாளே பெட்ரோல் டீசல் விலையைக் முற்றிலுமாக குறைத்தது. 

அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் 5 ரூபாயும் அதிரடியாக குறைக்கப்பட்டது. 

இதையடுத்து, பாஜக ஆளும் மாநிலங்களிலும் மாநில வாட் வரிகள் குறைக்கப்பட்டன. ஆனால், பாஜக ஆளாத பிற மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்கவில்லை. 

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்தந்த மாநில பாஜக தலைவர்கள், “மாநில அரசுகள் வாட் வரியைக் குறைக்க வேண்டும்” என்கிற குற்றச்சாட்டை முன்வைத்தனர். 

ஆனால், அந்தந்த மாநில அரசுகளோ, “நாங்கள் வாட் வரியை அப்படியே தான் வைத்திருக்கிறோம். பெட்ரோல் டீசல் விலையைக் கூட்டியது மத்திய அரசு தான்” என்று, வெளிப்படையாகவே அறிவித்தன.

இந்த நிலையில் தான், ஜார்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விலை அதிரடியாக 25 ரூபாயாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, இன்னும் சில நாட்களில் புத்தாண்டு வர உள்ள நிலையில், ஜார்கண்ட் மாநில மக்களுக்கு புத்தாண்டு பரிசு அளிக்கும் வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

அதுவும், “இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்படுவதாக” அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தற்போது அறிவித்து உள்ளார். 

இது குறித்து டிவீட் செய்துள்ள அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், “பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

இதனால், “மாநில அளவில் இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் மீது 25 ரூபாய் வீதம் அரசு நிவாரணம் அளிக்க முடிவு செய்துள்ளது என்றும், இது அடுத்தாண்டு ஜனவரி 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்” என்றும், அவர் அறிவித்து உள்ளார்.

மேலும், “10 லிட்டர் பெட்ரோல் வரை இந்த நிவாரணம் அளிக்கப்படும் என்றும், முதலில் மொத்தமாகப் பெறப்பட்டு, அதன் பிறகு 25 ரூபாய் மக்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும்” என்றும், அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.