பணக்கார பெண் ஒருவர், 2 வது காதல் கணவருடன் வாழ்ந்துகொண்டே 3 வதாக ரவுடி ஒருவரை காதலித்து அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததால் ஆத்திரமடைந்த 2 வது காதலன், நடுரோட்டில் வைத்து வாளால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு புறநகர் பகுதியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டமான ஆனேக்கல் தாலுகா ஜிகனியை சேர்ந்த 40 வயதான அர்ச்சனா ரெட்டி என்ற பெண், 
ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், ஒரு மகன் இருக்கிறார்.

இதனையடுத்து, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக அர்ச்சனா ரெட்டி, தனது முதல் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். 

அதன் தொடர்ச்சியாக, அர்ச்சனா ரெட்டிக்கும், நவீன் குமார் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து உள்ளனர். இதனையடுத்து, அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் தான், ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணாவில் அர்ச்சனா ரெட்டிக்கு ஏராளமான சொத்துகள் உள்ள நிலையில், அந்த சொத்துகளில் பாதியை தனக்கு பிரித்து தர வேண்டும் என்று அர்ச்சனா ரெட்டியிடம், நவீன் குமார் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு அர்ச்சனா ரெட்டி மறுக்கவே, இது குறித்து நவீன் குமாருக்கும், அர்ச்சனா ரெட்டிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருக்கிறது. 

அத்துடன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அர்ச்சனா ரெட்டி, 2 வது கணவன் நவீன் குமாரை பிரிந்தார் என்றும் கூறப்படுகிறது. 

அதன் தொடர்ச்சியாக, அவர் தனது மகனுடன் பெல்லந்தூரில் வசித்து வந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரை 3 வதாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த 2 வது கணவன் நவீன்குமார், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அப்படி இருந்து உள்ளார்.

இந்த நிலையில் தான், நேற்று முன்தினம் அங்குள்ள ஜிகனியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க அர்ச்சனா ரெட்டி காரில் பெல்லந்தூரில் இருந்த ஜிகனிக்கு சென்றார். அப்போது, தேர்தலில் வாக்களித்துவிட்டு பெல்லந்தூருக்கு அர்ச்சனா ரெட்டி சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது, அர்ச்சனா ரெட்டி வந்த காரை இருசக்கர வாகத்தை வைத்து மோத விட்டு, காரை நிறுத்திய நிலையில், அங்கு வந்த நவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அர்ச்சனா ரெட்டியை காரிலிருந்து வெளியே இழுத்து வந்து நடுரோட்டில் வைத்து வாளால் சரமாரியாக மிகவும் கொடூரமான முறையில் வெட்டி உள்ளனர்.

இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த அர்ச்சனா ரெட்டி, ரத்த வெள்ளத்தில் விழுந்த நிலையில், அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

குறிப்பாக, அர்ச்சனா ரெட்டி உயிரிழந்ததை உறுதி செய்துகொண்ட நவீன்குமார், அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்று சென்றனர். அப்போது, அந்த வழியாக சென்ற பிற வாகன ஓட்டிகள் இதனை நேரில் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், அதில் ஒருவர் இதனை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியிட்டு உள்ளார். 

இது தொடர்பாக விரைந்துச் சென்ற போலீசார், அர்ச்சனா ரெட்டியின் உடலை பிரேதப் பரிசோதனை்கு அனுப்பி வைத்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையம், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.