தமிழக அரசின் 2022-ம் ஆண்டு பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் "இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டு இருப்பதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

pongal parisu pai

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “பெட்ரோல் விலை குறைப்பு, டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, கல்விக் கட்டணம் ரத்து, முதியோர் உதவித் தொகை உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் என தி.மு.க.வால் அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்; வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் எப்போது வழங்கப்படும் என்று மக்கள் காத்திருந்த நிலையில், மக்கள் எண்ணத்திற்கு முற்றிலும் மாறான வகையில், 2022-ம் ஆண்டு பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் "இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டு இருப்பது தமிழக மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் விதமாக அமைந்துள்ளது. 

மேலும் தமிழ்நாட்டில் பல நூற்றாண்டு காலமாக சித்திரை மாதப்பிறப்பு தான், தமிழ் புத்தாண்டு தினமாக தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது காலம் காலமாக கடைபிடிக்கப்படுகின்றன மரபு. இந்த மரபினை முற்றிலும் சீர்குலைக்கும் விதமாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் மக்களின் உணர்வுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், தை மாதம் முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்பதற்கு வழிவகை செய்யும் சட்டம் முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் 2008-ம் ஆண்டு இயற்றப்பட்டது.  இந்த சட்டம் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு சட்டம். இந்த சட்டம் சாதாரண மனிதனின் உரிமையை பறிக்கும் சட்டம் என்று அப்போதே மக்கள் சொன்னார்கள். பண்டிகை என்பது இதுநாள் வரை கடைபிடித்து வந்த முறைப்படி, மரபுப்படி, கலாச்சாரத்தின் படி, பழக்க வழக்கத்தின் படி கொண்டாடப்படுகிறது. இதற்கு எதற்கு சட்டம் இதில் ஏன் அரசு தலையிடுகிறது? என்பது தான் மக்களின் வாதமாக இருந்தது. எனவேதான் சட்டம் இயற்றப்படும் தமிழ்நாட்டு மக்கள் சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர் என்று தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து இந்த தருணத்தில் மாண்புமிகு அம்மா அவர்கள் 2011-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் ’தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு’ என்பதற்கு வழி வகுத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுக்கள் தமிழ்நாட்டு மக்களால் அம்மா அவர்களிடம் அளிக்கப்பட்டன. தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு அம்மா அவர்கள்,  மக்கள் நம்பிக்கை சட்டத்தின் மூலம் மாற்றப்படுவது சரியல்ல என்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கு மாறாக இயற்றப்பட்ட சட்டத்தை நீக்கும் வகையில் தமிழ்நாடு தமிழ் புத்தாண்டு நீக்க சட்ட முன்வடிவை 23-8-2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அதனை சட்டம் ஆக்கினார். இந்த சட்டத்தின்படி தை முதல் நாள் தமிழ்புத்தாண்டு என்கின்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இச்சூழ்நிலையில் 2022-ம் ஆண்டு பொங்கல் பரிசு பையின் முகப்பில் ’இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறது. இதனால் மக்களை அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.  2022-ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்ற ஆண்டைப் போல ரொக்கமாக 2,500 ரூபாய் வழங்கும் என்று மக்கள் எதிர்பார்த்து இருந்த சூழ்நிலையில், இதுபோன்ற வெத்து அறிவிப்பு மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.  இதுவும் ஒருவிதமான கருத்து திணிப்பு.  எந்த பண்டிகையை கொண்டாட வேண்டும், எப்பொழுது கொண்டாட வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை மக்களிடத்தில் தான் இருக்கிறது . அதை மக்கள் விருப்பப்படி விட்டுவிடுவதுதான் நல்லது என்று மக்கள் நினைக்கிறார்கள். 

தமிழ்நாடு அரசின் தற்போதைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது,”t is better to change the opinion To persist in wrong one”. “அதாவது தவறான ஒன்றை விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்வதற்கு பதிலாக கருத்தினை, எண்ணத்தை மாற்றிக் கொள்வதே சிறப்பு” என்ற சாக்ரடீஸின் தத்துவம் தான் என் நினைவுக்கு வருகிறது. எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களின் உணர்ச்சிகளுக்கு, கருத்துகளுக்கு மதிப்பளித்து சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்ற நடைமுறை, மரபு, கலாச்சாரம் தொடர்ந்திடவும்,  பொங்கல் பரிசு பையின் முகப்பில் ’தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்’ என்ற வாசகங்களை குறிப்பிட்டு,  தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளதை நிறுத்தவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.