தமிழகத்தில் இன்று முதல் 5-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழையால் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி என அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. 

தொடர்ந்து பெய்த கனமழையால் சில பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 15 நாட்களுக்கும் மேலாக இருப்பளவு தண்ணீரில் மக்கள் பலர் சிரமத்தோடு வாழ்ந்து வருகின்றனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் கன மழை கொட்டித்தீர்த்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் கன மழையால் தேங்கிய மழைநீர் இன்னும் வடியவில்லை.

அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து மழை பெய்து, மக்களுடைய இயல்பு வாழ்க்கையில் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. சென்னையை பொறுத்தமட்டில் நேற்று காலையில் இருந்தே வெயில் சுட்டெரித்தது. தமிழகத்தில் இன்று முதல் 5-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினாலும், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்ட செய்தி குறிப்பில்:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 3-ம் தேதி தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மேலும் 4-ம் தேதி, 5-ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து 4-ம் தேதியன்று வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 90 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 கி.மீ. முதல் 80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும், மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புயல் காற்று மணிக்கு 60 கி.மீ. முதல் 70 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 80 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே அந்தமான் கடல் பகுதி, தென்கிழக்கு வங்க கடல், மத்திய வங்க கடல், வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.