அரசு அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, பெண் சத்துணவு அமைப்பாளர் 3 மாத கைக்குழந்தையோடு பெட்ரோல் கேனுடன் வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி 34 வயதான சவிதா, இரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணி புரிந்து வருகிறார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேற்று மாலை நேரத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக, கையில் பெட்ரோல் கேனுடன் தனது 3 மாத ஆன கைக்குழந்தையுடன் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வருகை தந்தார்.

அப்போது, இதனைப் பார்த்த பாடாலூர் போலீசார் ஓடிச்சென்று அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறித்துக்கொண்டனர். 

இதனையடுத்து, அந்த பெண் சவிதா, தனது கைக்குழந்தையுடன் அங்கு திடீரென்று அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதனையடுத்து, போலீசார் அவரிடம் சமாதானம் பேசி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், “ஏற்கனவே சவிதா, இரூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்த போது, அவரை அந்த மாவட்ட நிர்வாகமானது, அருகில் உள்ள சிறுகன்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்தது. 

அதன் படி, அவர் இரூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் பணிமாறுதல் வழங்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள மாவட்ட  அலுவலகத்தில் தொடர்ச்சியாக மனு அளித்து கோரிக்கை” விடுத்து வந்தார். இப்படியாக, அவர் நடத்திய பல்வேறு போராட்டங்களுக்குப் பலனாக, அவருக்கு இரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பணி கிடைத்தது. 

இந்த நிலையில், அந்த பள்ளியில் சவிதா பணிக்கு சேர்ந்து ஒரு மாதம் கடந்த நிலையில், அவருக்கு இன்னும் முறையாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்று, கூறப்படுகிறது.

இதனால், மருத்துவ செலவிற்கு கூட அவர் சத்துணவு கூட்டுறவுச் சங்கம் மூலம் கடன் தொகை கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார். ஆனால், அங்குள்ள ஆலத்தூர் ஊராட்சி  ஒன்றிய அலுவலக அதிகாரிகளால், அவர் முற்றிலுமாக அலைக்கழிக்கப்பட்டு சம்பளமும், கடன் தொகையும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இதன் காரணமாக, இன்னும் மனமுடைந்த சவிதா, அங்குள்ள அரசு அதிகாரிகளைக் கண்டித்து தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக, பெட்ரோல் கேனுடன் வருகை தந்திருந்தார். ஆனால், போலீசார் உடனடியாக ஓடி வந்து அதனைத் தடுத்து விட்டனர். இதன் காரணமாகவே அவர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் முறையாகக் கோரிக்கை மனு எழுதி வாங்கிக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்து, அந்த பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.