திருமண நிகழ்வில், மணப்பெண்ணான தங்கையை மகிழ்விக்க, உயிரிழந்த தந்தை சிலையுடன் அந்த பெண்ணின் அக்கா மேடைக்கு வந்த நிகழ்வால், இன்ப அதிர்ச்சிக்கு ஆளான மணப்பெண், அந்த மேடையிலேயே ஆனந்த கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தங்கவேல் நகரைச் சேர்ந்த செல்வம், தொழில் அதிபராக இருந்து வந்தார். இவருக்கு கலாவதி என்ற மனைவி உள்ளார். 

இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில், தொழில் அதிபர் செல்வம் தன்னுடைய இரு மகள்களுக்குத் திருமணம் செய்து வைத்தார். ஆனால், அதன் தொடர்ச்சியாக, தொழில் அதிபர் செல்வம் கடந்த 2012 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தொழில் அதிபர் செல்வம் உயிரிழந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு, செல்வத்தின் 3 வது மகள் லெட்சுமி பிரபாவுக்கும், இளைஞர் கிஷோர் என்பவருக்கும் நேற்றைய தினம் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. 

அதே நேரத்தில், “தன்னுடைய திருமணத்தின் போது தந்தை செல்வம் இல்லாததை நினைத்துப் பார்த்தது மணப்பெண் லெட்சுமி பிரபா, மிகவும் சோர்வாகவும், வருத்தமாகவும்” காணப்பட்டார். 

தன்னுடைய தங்கையின் இந்த சோகத்தையும், வருத்தத்தையும் புரிந்துகொண்ட லண்டனில் மருத்துவராக இருக்கும் அவரது மூத்த சகோதரி புவனேஸ்வரி,  அவருடைய கணவர் கார்த்திக் ஆகிய இருவரும் சேர்ந்து மணப்பெண் லெட்சுமி பிரபாவின் வருத்தத்தைப் போக்க முடிவு செய்தனர்.

அதன் படி, உயிரிழந்த தந்தை செல்வத்தின் உருவத்தைச் சிலையாக உருவாக்க அவரது சகோதரி முடிவு செய்தார். திட்டமிட்டபடி, பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுமார் 6 லட்சம் ரூபாய் செலவில் சிலிக்கான் மற்றும் ரப்பரால் சிலையை வடிவமைத்தனர். 

இதனையடுத்து, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நேற்று நடந்த தங்கை லெட்சுமி பிரபா திருமண வரவேற்பு விழாவின் போது, மேடைக்கு வந்த மணப்பெண்ணின் சகோதரி புவனேஸ்வரி, மணமக்கள் முன்பாக தந்தையின் முழு உருவ சிலையை மேடைக்குக் கொண்டு வந்து தனது தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

அப்போது, தந்தையின் சிலையைப் பார்த்த மணப்பெண் லெட்சுமி பிரபா, அங்கேயே கண்ணீர் விட்டு அழுதார். அதன் பிறகு, தந்தையின் சிலை முன்பு மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டு தந்தை சிலைக்கு அருகே தாயை நிற்க வைத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வானது, அந்த திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. இதற்கு, சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து 
வருகின்றனர்.