சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல - கமல்ஹாசன்
By Abinaya | Galatta | Feb 02, 2021, 04:44 pm
குடி நோயாளிகளுக்கு இலவச மறுவாழ்வு மையங்கள் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசை மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பட்டப்பகலில் குடித்துவிட்டு பொது இடங்களில் தகராறில் ஈடுபட்ட ஒரு குடிநோயாளியால் கடமை தவறாத காவல் உதவி ஆய்வாளர் பாலு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடிநோயாளியினால் குடும்பத்தில் ஏற்படும் துன்பம் தாங்காமல் அவரது மனைவியும் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.
குடிமைப்பணி அதிகாரிகளை பொறுப்பில் அமர்த்தி ஆயிரக்கணக்கான கடைகளைத் திறந்து லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களை பட்டப்பகலிலேயே குடிக்கும் குடிநோயாளிகளாக மாற்றி இருக்கிறது இந்த அரசு.
சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல. அது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விற்பனை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டிய ஒன்று.
குடியிலிருந்து மீள நினைக்கும் குடி நோயாளிகளுக்கு தரமான இலவச மறுவாழ்வு மையங்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட வேண்டும். எங்கெல்லாம் மதுக்கடைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் மறுவாழ்வு மையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்" என்றுள்ளார்.



