“நீட் தேர்வு எழுதுகின்ற மாணவர்களின் நலனில் பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லையா?” என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆகியவற்றில், மேனிலை இறுதி ஆண்டு தேர்வை நடத்துவது இல்லை என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்துள்ளார் என்றும், மாணவர்களின் உடல்நலம், மனநலத்தைக் கணக்கில் கொண்டு, இந்த முடிவை எடுத்து இருப்பதாக விளக்கம் அளித்து இருக்கின்றார்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

“ஆனால், நீட் தேர்வு கிடையாது என அறிவிக்கவில்லை, இந்த ஆண்டும் நடத்த உள்ளனர். அப்படியானால், அந்தத் தேர்வு எழுதும் மாணவர்களின் உடல் நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லையா? அவர்கள் மன அழுத்தங்களால் பாதிக்கப்பட மாட்டார்களா? அவர்களை மட்டும் கொரோனா தொற்று தாக்காமல், விதிவிலக்கு அளிக்குமா?” என்றும், அடுக்கடுக்கான கேள்விகளை வைகோ எழுப்பி உள்ளார்.

அத்துடன், “இது ஒரு சூழ்ச்சித் திட்டமே ஆகும் என்றும், அதற்கு காரணம், அவர்கள் ஏற்கனவே கொண்டு வந்து திணித்து இருக்கின்ற புதிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் சேருவதற்கு, மேனிலைப் பள்ளித் தேர்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும், தேசிய தேர்வு முகமை நடத்தும் திறன் அறித்தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தான் சேர்க்கை என்று கூறி இருக்கின்றார்கள்” என்பதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“இந்த ஆண்டு மட்டும் அல்ல, இனி எப்போதுமே மேனிலைப் பள்ளித் தேர்வு நடத்த வேண்டிய தேவை இல்லை என்பது தான் அவர்கள் திட்டம் ஆகும்” என்றும், பகிரங்கமா குற்றம்சாட்டி உள்ளார். 

“ஆனால், மாநில அரசுகளின் பாடத்திட்டங்களைப் பொறுத்தமட்டில், மேனிலைப் பள்ளித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தான், கல்லூரிச் சேர்க்கை நடைபெறுகின்றது என்றும், அயல்நாடுகளின் பள்ளி, கல்லூரிச் சேர்க்கைக்கும் அந்த மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்றும், வேலை வாய்ப்புகள் பெறுவதற்கும் அதுவே தகுதியாக இருக்கின்றது என்றும், மருத்துவக் கல்லூரிகளுக்கும் அந்த அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும், நீட் தேர்வு கூடாது என்பது தான், தமிழ்நாட்டின் கருத்து” என்றும், வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார்.

“எனவே, ஒன்றிய அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல், தமிழ்நாட்டின் கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, அதன்படி தமிழ்நாடு அரசு முடிவு எடுக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பாக, “கொரோனா தொற்றின் வேகம் குறைந்த பிறகு, ஒரு மாத முன் அறிவிப்போடு, மேனிலைப் பள்ளித் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் வலுவான பள்ளிக் கல்வி கட்டமைப்பு உள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடையாமல், தங்களின் பயிற்சிகளைத் தொடருகின்ற வகையில், மேனிலைப் பள்ளித் தேர்வு நடக்கும் என்ற தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்” என்றும், வைகோ வலியுறுத்து கேட்டுக்கொண்டு உள்ளார்.