புதுச்சேரி கிரிக்கெட் அணியில் தமிழர்கள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பல தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர். 

இந்தியா கிரிக்கெட் அணியில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக சேலத்தைச் சேர்ந்த நடராஜன், பட்டையைக் கிளப்பி வருகிறார். இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டு வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், புதுச்சேரி கிரிக்கெட் அணியில் தமிழர்கள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், நடராஜனைப் போல, ஓராயிரம் நடராஜன்கள் வெளியே இருக்கிறார்கள் என்று கருத்தும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தங்கராசு நடராஜன், இந்திய கிரிக்கெட் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டு விளையாடி வரும் இந்தத் தமிழ் மகனின் பெயரை இப்போது உலகத் தமிழர்கள் பெருமிதத்தோடு உச்சரித்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளது. 

“இந்தியக் கிரிக்கெட் அணியிலுள்ள அந்த ஒற்றைத் தமிழனின் சாதனைகளைப் பேசிவரும் இந்த நேரத்தில், அவரைப் போலவே திறமை இருந்தும் புதுச்சேரி என்ற தனது சொந்த மாநிலத்தின் கிரிக்கெட் அணியிலேயே புறக்கணிக்கப்படும் புதுச்சேரியின் ‘தங்கராசு நடராசன்’களுக்காக நீதிகேட்டுப் போராட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்” என்றும், கூறியுள்ளது.

“ராஜஸ்தானத்தைச் சேர்ந்த பங்கஜ் சிங், மும்பையைச் சேர்ந்த ஷஷாங்க் சிங், பரிக்ஷித் வல்சங்கர், சாகர் பரேஷ் உதேசி, சாகர் திரிவேதி, இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பரோஸ் டோக்ரா, கேரளாவைச் சேர்ந்த அபிஷேக் மோகன் நாயர், ஃபேபிட் அகமது, வி.எஸ். அப்துல் சபர், கர்நாடகத்தைச் சேர்ந்த ஆஷிஸ்ட் ராஜீவ் சங்கனக்கல் - இவர்களெல்லாம் யாரென்று பார்க்கிறீர்களா? புதுச்சேரி கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள கிரிக்கெட் வீரர்களாம் இவர்கள் தான்” என்றும், அந்த தமிழ் அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது. 

“தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியும், காரைக்காலும் தமிழர்கள் காலங்காலமாக வாழ்ந்து வரும் வரலாற்றுத் தாயகங்கள். கேரளாவிலிருக்கும் மாகே,
ஆந்திரத்திலிருக்கும் யானம் ஆகிய பகுதிகள், புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் மாவட்டங்களாகப் பிணைக்கப்பட்டிருந்தாலும் கூட, மக்கள் தொகையில் புதுச்சேரி
ஒன்றியப் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் 94 விழக்காட்டினர். ஆனால், புதுச்சேரி கிரிக்கெட் அணியிலோ முழுக்க முழுக்க இந்திக்காரர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர்களே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். “கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி” (சி.ஏ.பி.) என்ற தனியார் சங்கத்தின் வழியே தொடர்ந்து இம்முறைகேடு நடந்து வருகிறது” என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது.

“இந்த அநீதியைக் கண்டித்தும், புதுச்சேரி அணியில் புதுச்சேரி - காரைக்காலைச் சேர்ந்த தமிழர்களுக்கே 90 விழுக்காடு இடமளிக்கும் வகையில், புதுச்சேரி அரசே தனி கிரிக்கெட் சங்கம் உருவாக்க வேண்டுமெனக் கோரியும், வரும் 26 ஆம் தேதி அன்று புதுச்சேரியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பெருந்திரள் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது” என்றும், அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

புதுச்சேரி ராஜா திரையரங்கம் அருகில் 26 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு, நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சக கிரிக்கெட் வீரர்களும், தமிழின உணர்வாளர்களும் பங்கேற்கின்றனர். பாரதிதாசன் புதுச்சேரி கிரிக்கெட் வீரர்கள் சங்கச் செயலாளர் க.சந்திரன், இந்த போராட்டத்திற்கு முன்னிலை வகிக்கிறார். 

இந்நிகழ்வில், புதுச்சேரி - காரைக்கால் தமிழ் இளைஞர்களும், தமிழின உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும்” என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த செய்தி, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.