சிறுமியை ஒரு இளைஞன் பலாத்காரம் செய்ததை அறிந்த மற்றொரு இளைஞன், அந்த சிறுமி குளிக்கும்போது வீடியோ எடுத்து, கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து மிரட்டி வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவின் வட மாநிலங்களில் நடைபெறும் இந்த சம்பவம், இந்த முறை தமிழகத்தில் அதுவும் மயிலாடுதுறையில் அரங்கேறி பொது மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

மயிலாடுதுறையைச் சேர்ந்த 17 வயதான சிறுமி, தனது பெற்றோருடன் வசித்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அந்த சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இப்படியான சூழ்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான வினோத் கண்ணா என்ற இளைஞன், அந்த 17 வயது சிறுமி வீட்டின் குளியரையில் குளிக்கும் போது, அதனை மறைந்து நின்று செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார்.

இதனை, அந்த சிறுமியின் தாயார் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார். இதனையடுத்து, அந்த இளைஞரைப் பிடித்து அந்த சிறுமியின் தாயார் மிரட்டி விசாரித்து உள்ளார். 

அப்போது, “குறிப்பிட்ட அந்த 17 வயது சிறுமிக்கும் அங்குள்ள தருமபுரம் ஆலமரத்தடியைச் சேர்ந்த 23 வயதான நவீன் என்ற இளைஞருக்கும் கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்பு இருப்பதும், அந்த இளைஞன் ஏற்கனவே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும்” தெரிய வந்திருக்கிறது.

அத்துடன், “ நவீன், இந்த சிறுமியை பலாத்காரம் செய்ததைத் தெரிந்துகொண்ட வினோத் கண்ணா, சிறுமியை மிரட்டி காரியம் சாதித்துக்கொள்வதற்காக, அவர் குளிக்கும் போது செல்போனில் வீடியோ எடுத்ததும்” தெரிய வந்தது. 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், இது தொடர்பாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட 2 இளைஞர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர்கள் இருவரும் உண்மையை ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன், இது போன்று வேறு எதாவது சிறுமிகளிடமோ அல்லது பெண்களிடமோ, அவர்கள் இது போன்று அத்து மீறி செயல்பட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, 2 இளைஞர்கள் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தனர். பின்னர், அவர்கள் இருவரையும் நீதிமன்ற உத்தரவுப் படி, சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.