இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து உருவாகி வரும் படம் மாநாடு. அரசியலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 

யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். அவரின் பாடல்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இதன் படப்பிடிப்பு முன்பே தொடங்கிவிட்டாலும், கொரோனா காரணமாக மற்ற படங்களைப் போல், இதன் ஷூட்டிங்கும் பாதிக்கப்பட்டது. பின்னர் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும், மீண்டும் வேலைகள் தொடரப்பட்டது. 

கொரோனா காலத்திலும், தவறாமல் படப்பிடிப்புக்குச் சென்று படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தினாராம் சிம்பு. இரண்டு நாட்கள் முன்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் மண் தரையில் உறங்கிய சிம்புவின் புகைப்படம் வைரலானது. 

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், மாநாடு ஷூட்டிங் முடிந்து விட்டது. படத்தின் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. குழுவினர் அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். வெங்கட் பிரபுவின் இந்த பதிவை ரீட்வீட் செய்துள்ளார், படத்தின் நாயகியான கல்யாணி பிரியதர்ஷன்.

அத்துடன், 14 நாள் சூட்டிங்கை 7 நாட்களில் முடித்துள்ளீர்கள். வேற லெவல் சார் உங்க டீம் என குறிப்பிட்டுள்ளார்.

மாநாடு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு பத்து தல படப்பிடிப்பில் சிம்பு இணைவார் என்று கூறப்படுகிறது. அதன் பின் கெளதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் நடிக்கவிருக்கிறார்.