தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கான அறிவுரைகள் தற்போது வழங்கப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள அறிவுறுத்தல்களின் படி,

- தமிழக சட்டப் பேரவைத் தேர்தலானது, ஏப்ரல் 6 ஆம் தேதியான நாளைய தினம் காலை 7 மணி முதல், இரவு 7 மணிவரை நடைபெறுகிறது. 
- இதனால், வாக்களிக்கச் செல்லும் பொழுது கண்டிப்பாக அனைவரும் முகக்கவசம் அணிந்து புதிய வாக்காளர் அடையாள அட்டை எடுத்துச்செல்ல வேண்டும்.
- கடிப்பாக வாக்குப்பதிவின் போது அனைவரும் வரிசையில் தகுந்த இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.
- வாக்களிப்பதற்கு முன்பு அனைவருக்கும் கிருமிநாசினி கொடுக்கப்பட்டு, தெர்மோ மீட்டர் கொண்டு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும். 

- கொரோனோ வைரஸ் பாதிப்பு இருந்தாலும், தனிமையில் இருந்தாலும், தனியா வந்து மாலை 6 மணி முதல் 7 மணிவரை வாக்குச்சாவடிக்குச் சென்று தகுந்த கவச உடை அணிந்து வாக்களிக்கலாம். இந்த குறிப்பிட்ட நேரம் கோவிட்-19 அறிகுறி உள்ளவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமையில் இருப்பவர்களுக்கு என்றே தனியாக ஒதுக்கப்பட்டு உள்ளது.

- வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு நுழைவதற்கு முன்பு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வலது கை உறையை முழுமையாக அணிந்துகொண்டு முதலாம் தேர்தல் அலுவலரிடம் உங்களுக்கு வழங்கப்பட்ட பூத் ஸ்லிப் (அல்லது உங்களது பாகம் எண் வரிசை எண் விபரத்தை), வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டு சென்று காண்பிக்க வேண்டும்.

- உங்களுடைய அடையாளத்தை உறுதி செய்த பிறகு, முதலாவது தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்காளர் பெயர், பாகம் எண், வரிசை எண்ணை உரத்த குரலில் கூறுவார். இதனைத் தேர்தல் முகவர்கள் உறுதி செய்த பிறகு நீங்கள் இரண்டாவது தேர்தல் அலுவலரிடம் சென்று 17ஏ பதிவேட்டில் கையொப்பமிட்டு, உங்களுடைய இடதுகை ஆள் காட்டி விரலில் அழியாத மை வைக்க வேண்டும். 

- பிறகு அவர் உங்களுக்கு வாக்களிக்க வாக்காளர்கள் சீட்டு வழங்குவார். அதைப் பெற்றுக்கொண்டு மூன்றாவது தேர்தல் அலுவலரிடம் சென்று அந்த வாக்காளர்கள் சீட்டைக் கொடுத்த பின்பு அவர் உங்களுக்கு பேலட் யூனிட்டில் வாக்களிக்க அனுமதி வழங்குவார்.

- அதன் படி, வாக்களிக்கும் இடத்திற்குச் சென்று, கையுறை அணிந்த வலது கை விரல்களால் வேட்பாளர் பொத்தானை அழுத்தி, பீப் ஒலி வருவதையும், வேட்பாளருக்கு அருகிலுள்ள சிவப்பு விளக்கு எரிவதையும், அருகிலுள்ள விவிபேட் இயந்திரத்தில் நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் சின்னம் பிரிண்ட் செய்யப்பட்டு 7 வினாடிகள் காண்பிக்கப்படுவதையும் உறுதி செய்யலாம்.

- அதன் பிறகு, பிறகு வாக்குச்சாவடி மையத்தின் வெளியே நீங்கள் அணிந்துள்ள வலது கையுறையைக் கழற்றி அதற்குரிய நெகிழிக்குப்பைப் பையில் போட்டுவிட்டு வாக்குச்சாவடி மையத்தை விட்டு வெளியேற வேண்டும். 

- வாக்குச் சாவடிக்குள் வாக்குச்சாவடி தலைமை அலுவலரைத் தவிர மற்றவர்கள் செல்போன் கொண்டுசெல்ல அனுமதி இல்லை.

- ஆதார் ஆட்டை, நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு), பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன்கூடிய ஓய்வூதிய ஆவணம், வங்கி, அஞ்சல் அலுவலகங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு அடையாள அட்டை, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள், தொழிலாளர் நலத் துறையால் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் அட்டை, மக்கள் தொகை பதிவேட்டால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்ட அடையாள அட்டைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளது.

இவற்றுடன், 
- மாற்றுத்திறனாளிகள் தங்களது வீடுகளிலிருந்து வாக்குச்சாவடிக்குச் செல்வதற்கான வசதிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
- தேர்தல் ஆணையத்தின் பி.டபிள்யு.டி. (PWD) என்ற செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து, இதன் மூலம் வாக்குச்சாவடி அலுவலரை அறிந்துகொண்டு சக்கர நாற்காலிக்கு விண்ணப்பிக்கலாம்.

- வாக்களிக்கச் செல்லும் முன் நீங்கள் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்திற்குள் சென்று உங்கள் தொகுதியில் யார், யார் போட்டியிடுகிறார்கள் என்பதை முழுவதுமாகத் தெரிந்துகொள்ளலாம். 
- உங்களின் வாக்காளர் அட்டையில் உள்ள தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் elections.tn.gov.in என்ற வலைத்தளத்திற்குள் சென்று தெரிந்துகொள்ளலாம்.இந்த வலைத்தளத்தில் உங்கள் வாக்குச்சாவடி எங்குள்ளது என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். 

- முக்கியமாக நீங்கள் முகக்கவசம் எடுத்துச் செல்ல வேண்டும். வாக்களிக்கச் செல்லும் இடத்தில் நீங்கள் தகுந்த இடைவெளியைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.