“ஓட்டு போட போறீங்களா? அப்ப இதை செய்யுங்கள்” என்று, பொது மக்களுக்கு நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகர் விவேக் அறிவுரை வழங்கி உள்ளனர்.

தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

ஒரு பக்கம் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் நிலையில், மற்றொரு பக்கம் கொரோனாவின் 2 வது அலையானது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி இருக்கிறது.

தமிழகத்தின் கொரோனா 2 ஆம் அலையின் தினசரி பாதிப்பு தற்போது 3,500 ஆக அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில், 10 நாட்களுக்குள் கொரோனா வைரஸ் பரவல் இரு மடங்காக அதிகரித்து இருக்கிறது. கடந்தாண்டு, முழுவதும் பெரிய அளவில் தமிழகம் உட்பட இந்தியாவையே அச்சுறுத்தி வந்த கெரோனா வைரஸ் தொற்று, தொடர் ஊரடங்கு காரணமாக ஓரளவிற்குக் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், ஊரடங்கு தளர்வினாலும், பொது மக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வு குறைந்ததாலும், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்காக, வாக்கு இயந்திரங்களை அந்தந்த வாக்கு சாவடிகளுக்கு அனுப்பும் பணி தற்போது தீவிரமாகத் தொடங்கி உள்ளது.

ஒரு புறம் தேர்தல், மறு பக்கம் கொரோனா அலை, இன்னொரு பக்கம் வெயிலின் தாக்கம் என்று 3 முக்கிய கட்டத்தில் தமிழகம் தற்போது இருக்கிறது.

இந்நிலையில், நாளை தினம் ஓட்டு போட போகும் பொது மக்களுக்கு நடிகர்கள் சில அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.

அதன் படி, நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ள கருத்தில், “நாளை என்பது ஒரே ஒரு நாள் அல்ல, ஐந்தாண்டு கால குத்தகை!” என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், “பொத்தானில் குத்துகையில் கவனம் கொள்வோம்” எனறும், அவர் பதிவு செய்துள்ளார். 

இதன் மூலமாக, “தேர்தல் குறித்தும், வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவிடுகையில் கவனமாக ஆழ்ந்து யோசித்து போட வேண்டும் என்றும், நாளை ஒருநாள் அடுத்த 5 ஆண்டுகளுக்குமான குத்தகை” என்றும், இந்தப் பதிவின் மூலமாக நடிகர் பார்த்திபன் சொல்ல முற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

அதே போல், நாளைய தேர்தல் குறித்து நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை முன் வைத்து வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

அதன் படி, “பொது மக்கள் வாக்களிக்கச் செல்லும் போது முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் வீட்டுக்குள் வந்ததும் சோப் தண்ணீரில் கை கழுவுதல் அவசியம்” என்று, வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

அதாவது, அந்த வீடியோவில், “ஒவ்வொரு ஓட்டும் நமது உரிமை. அதனை விட்டுத் தரக் கூடாது. நாம் ஒருவர் வாக்களிக்க வில்லை என்றால் சமூகத்தில் என்ன பெரிய மாற்றம் வந்து விடப்போகிறது என எண்ணவே கூடாது” என்று, விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “இப்படி நாம் நினைப்பது ஜனநாயகத்திற்கு நாம் நினைக்கும் மிகப் பெரிய தீங்கு என்றும், ஒவ்வொரு ஆளுமையும், தலைமையும் அதனைத் தேர்ந்தெடுப்பது நம் விரல் மை. அதனை நாம் மறந்து விட கூடாது” என்றும், பொது மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

மேலும், “அது தான் ஜனநாயகத்தின் வலிமை. அதனை நாம் எப்போதும் விட்டுக்கொடுக்கக் கூடாது. நாம் எல்லோரும் வாக்குச் சாவடிக்கு சென்றோ, அல்லது 

வயதானவர்கள், வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க முடியாதவர்கள் தபால் ஓட்டு மூலமாகவோ வாக்களிக்க வேண்டும்” என்றும், நடிகர் விவேக் வலியுறுத்தி உள்ளார்.

இறுதியாக அந்த வீடியோவில், “வாழ்க இந்தியா! வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு! ஜெய் ஹிந்த் என்றும்” பேசி நடிகர் விவேக் அந்த வீடியோவை நிறைவு செய்கிறார்.

இதனிடையே, “கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக மீண்டும் அரியணை ஏற முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. கருணாநிதி இல்லாத முதல் 

சட்டமன்ற தேர்தலை இப்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சி எதிர்கொள்கிறது. இதனால், தனது முழுமையான ஆளுமையை நிரூபித்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் திமுக இருக்கிறது. அதே போல், திமுக தொடர்ந்து 3 வது முறையாக ஆட்சி அமைக்க முனைப்புக் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.