“காவிரித் தாய் மார்பறுக்க வரும் ஹல்தரே திரும்பிப் போ” என்று, காவிரி மேலாண்மை குழு ஆய்வுக்கு, காவிரி உரிமை மீட்புக் குழு கல்லணையில் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ்.கே. ஹல்தர், நடுநிலை தவறிய நபர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே துச்சமாக புறக்கணிக்கக்கூடியவர். காவிரி ஆணையக் கூட்டத்தின் வழியாக ஒரு தடவைகூட கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய காவிரி நீரை பெற்றுத் தராதவர். அதற்கான முயற்சியில் ஈடுபடாதவர்” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

“அவர், உச்ச நீதிமன்றம் விதித்த அதிகார வரம்பை மீறி, கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டிக் கொள்ள அனுமதி வழங்கக்கூடிய ஆவேசத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த அதிகாரம் ஆணையத்திற்குக் கிடையாது. அண்மையில் இந்திய அரசின் சட்ட அமைச்சகத்தின் அறிவுரையைப் பெற்றதாகவும், அது மேக்கேதாட்டில் அணை கட்டுவது குறித்து முடிவெடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது எனக் கூறியதாகவும், அடுத்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும் மேக்கேதாட்டு பற்றிய பொருள் விவாதிக்கப்படும் என்றும் 6.6.2022 அன்று செய்தி வெளியிட்டார்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அத்துடன், “மேற்படி ஆணையத்தின் கூட்டம் 17.6.2022 அன்று டெல்லியில் நடைபெறும் என்று அறிவித்த ஹல்தர், இப்பொழுது அக்கூட்டத்தை 23.6.2022 க்கு மாற்றி வைத்துவிட்டு, தமிழ்நாட்டுக் காவிரி அணைகளை நேரில் பார்த்து ஆய்வு செய்வதாகக் கூறிக் கொண்டு, நேற்று 16.6.2022 பில்லி குண்டுலு பகுதியைப் பார்வையிட்டு உள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று மேட்டூர் அணை மற்றும் சரபங்கா கால்வாய்த் திட்டம் ஆகியவற்றை பார்வையிட்டுவிட்டு,  திருச்சி கல்லணையைப் பார்வையிடுகிறார்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

“மேக்கேதாட்டு அணை அனுமதி குறித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கக் கூடாது என்று காவிரி உரிமை மீட்புக் குழுவும், மற்றும் விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், தமிழ்நாடு அரசு மேக்கேதாட்டு அணை குறித்து ஆணையத்தில் விவாதிக்க தடையாணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளது என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஹல்தரின் நடுநிலை தவறிய மேக்கேதாட்டு ஆதரவுப் போக்கைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதி உள்ளார்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், “இப்பின்னணியில், பருவம் தவறிப் பெய்த மழையினால் மேட்டூர் அணை நிரம்பியிருப்பதையும் காவிரி டெல்டா பகுதிகளுக்குத் தண்ணீர் தாராளமாகப் பாய்ந்து கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைக் கர்நாடகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என  ஆணையக் கூட்டத்தில் பேசவும், தமிழ்நாடு அரசும் கர்நாடகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேட்டூர் - சரபங்கா கால்வாய்த் திட்டம், காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துகிறது என்று பொருத்தமற்ற இலாவணிக் கச்சேரி பாடுவதற்காகவும் இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டிருப்பதாக ஐயம் ஏற்படுகிறது” என்றும், கவலைத் தெரிவித்து உள்ளார்.

“அதற்கு காரணம், அவர் ஆணையத் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஒரு தடவை கூட உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி வாராவாரம் மாதாமாதம் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரைத் திறந்துவிடச் செய்து செயல்படுத்திக் காட்டியதே இல்லை என்றும், பருவமழை மற்றும் பருவந்தவறிய மழை வெள்ளங்களால் மிகை நீரைக் கர்நாடகம் திறந்துவிட்டதை ஒட்டியும், கர்நாடக அணைகளுக்குக் கீழ்ப் பகுதியிலும் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியிலும் மழை நீர் ஓடி வந்ததாலும் மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வந்து, கடந்த சில ஆண்டுகளாக குறுவை - சம்பா சாகுபடி நடந்து வருகிறது என்றும், இவற்றுடன் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை காலத்தில் கூட இந்த ஹல்தர் தமிழ்நாட்டுப் பக்கம் எட்டிப் பார்த்ததில்லை” என்றும், அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

“மனச்சான்று உருத்தலின்றி, நடுநிலை தவறி கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களுக்குத் துணையாக செயல்படக்கூடிய நபர் இந்த ஹல்தர் என்பதை மோடி அரசு புரிந்து கொண்டுதான், இவருடைய பணி ஓய்வுக்குப் பிறகு இவரை 5 ஆண்டுகளுக்குக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அமர்த்தியது என்றும், இவர் இந்திய அரசின் நீராற்றல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் தான் கர்நாடக அரசிடம் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து அனுப்புமாறு இவரே வலிந்து கேட்டு வாங்கி, அதற்கு அனுமதி கொடுத்து, அதை காவிரி மேலாண்மை ஆணைய அனுமதிக்கு அனுப்பி வைத்தார்” என்றும், அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

குறிப்பாக, “இப்பொழுது அந்த மேக்கேதாட்டு திட்டத்திற்கு ஆணையம் அனுமதி கொடுப்பதற்கு எல்லா சதிகளையும் செய்கிறார் என்றும், நம்முடைய காவிரித் தாயின் மார்பறுக்க வரும் ஹல்தருக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டி திரும்பிப் போ என்று கண்டன முழக்கமெழுப்புவது தமிழ்நாட்டு உழவர்களின் கடமை மட்டுமல்ல, அனைத்து மக்களின் கடமையுமாகும்” என்றும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த சூழலில் தான், திருச்சி கல்லணையைப் பார்வையிட வந்த காவிரி மேலாண்மை குழு ஆய்வுக்கு, அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும் அளவில் ஒன்று திரண்டு, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.