திரைப்பட பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.

mkstalin

பிரபல சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம். இவர் அடையாறு சாஸ்திரி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மாணிக்க விநாயகத்துக்கு இருதய கோளாறு ஏற்பட்டது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73 பக்திப் பாடல்கள், நாட்டுபுறப் பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மயிலாடுதுறை அடுத்த வழுவூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். பழம்பெரும் பரத நாட்டிய ஆசிரியர் வழுவூர் ராமையாவின் மகனாவார்.

கடந்த 2001-ம் ஆண்டு வெளியான தில் திரைப்படத்தில் கண்ணுக்குள்ள ஒருத்தி என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார். திருடா திருடி, சந்தோஷ் சுப்பிரமணியம், திமிரு, பேரழகன், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பருத்தி வீரன், வெயில், சந்திரமுகி, தூள் உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ளார். 

இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்காவுடன் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். அவர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் சென்றிருந்தார்.

அதனைத்தொடர்ந்து முன்னதாக மாணிக்க விநாயகம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் பிரபல திரைப்பட பாடகரும், நடிகருமான வழுவூர் மாணிக்க விநாயகம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடி, துன்பமானாலும் துள்ளலானாலும் தனது குரல்வளத்தால் அவ்வுணர்வுகளை துல்லியமாக ரசிகர்களுக்கு கடத்தி விருந்தளித்தவர். அவரது தந்தை மற்றும் அண்ணனை போலவே தலைவர் கருணாநிதி மீதும் என் மீதும் அளவற்ற அன்பை பொழிந்தவர். அண்ணா அறிவாலயத்தில் என்னை சந்திக்கும்போதெல்லாம் மிகுந்த அக்கறையோடு நலம் விசாரிப்பவர்.

அவர் பெயரை போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த வழுவூர் மாணிக்க விநாயகத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதோடு அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கலையுலகத்தை சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மாணிக்க விநாயகம் உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறும் என அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் உள்பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.