ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் முதற்கட்டமாக 275 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

omicron beds

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து  தமிழகத்தில் ஒமிக்ரானை  எதிர்கொள்ளத் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முககவசங்கள் போன்றவை அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 4-வது தளத்தில் முதற்கட்டமாக 150 படுக்கைகள் தயார் செய்து ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 75 படுக்கைகளும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 15 ஐ.சி.யு படுக்கைகள், 35 பொது படுக்கைகளும் என மொத்தமாக 275 படுக்கைகள் ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன. கிண்டி கொரோனா மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் ஒமைக்ரான் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிக பரவல் தன்மையையும், 30-க்கும் மேற்பட்ட திரிபுகளையும் கொண்ட ஒமைக்ரான், தற்போது வரை 24 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் கூறியுள்ளது.

மேலும் ஒமிக்ரான்  திரிபு கண்டறியப்பட்ட பின்னர் தென் ஆப்ரிக்காவில், தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் 74 சதவிகிதம் பேருக்கு ஒமைக்ரான் திரிபு இருப்பதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.