சென்னையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வானகரத்தைச் சேர்ந்தவர் 34 வயது பெண் ஒருவர். இந்தப் பெண்ணின் கணவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்துவிட்டார். இதையடுத்து தனது இரு குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்தி வந்த அந்தப் பெண், கடந்த 2019 ஆம் ஆண்டு தனது மகள் படிக்கும் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த கற்பக் கனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். 

கணவர் இல்லாமல் விதவையான அந்த பெண்ணிடம் திருமணம செய்து கொள்வதாக கற்பக் கனி உறுதி அளித்ததால், தனது இரு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு அந்தப் பெண் கற்பகக் கனியை திருமணம் செய்துள்ளார்.

மேலும் ஓட்டுநராக இருப்பதால், தனக்கு வரதட்சணையாக சொந்தமாக ஒரு கார் வாங்கி தந்தால், திருமணம் செய்துக்கொள்வதாகவும் அந்தப் பெண்ணிடம் கற்பகக் கனி கூறியுள்ளார். இதனை நம்பி ஒரு காரை கற்பகக் கனிக்கு  வரதட்சணையாக கொடுத்து, திருமணம் செய்துகொண்டு, தனது இரு குழந்தைகளுடன் அந்தப் பெண் குடும்பம் நடத்தி வந்துள்ளார். 

ஆனால் ஓட்டுநர் கற்பகக் கனி, அந்தப் பெண் மற்றும் அவரது இரு குழந்தைகளுக்கு ஆதரவாக இல்லாமல் அவர்களுக்கு தொல்லையாக இருந்துள்ளார். திருமணத்திற்கு பின் தனது இரண்டாவது கணவர் நடவடிக்கை சரியில்லாமல் இருந்ததும், பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதும் அந்தப் பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. 

POCSO ACT CHENNAI

மேலும் கற்பகக் கனி வீட்டிற்கு வராமால் வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்ததும்  தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி இரண்டாவது கணவர் கற்பகக் கனி, தனது 13 வயது பெண் குழந்தைக்கும் தொடர்ந்து பாலியல் தொல்லை  கொடுத்ததையறிந்து அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.  

இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்ததன் அடிப்படையில், கற்பகக் கனி மீது  திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

எனினும் கற்பகக் கனி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தாலும் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இரண்டாவது கணவர் மீது நடவடிக்கை எடுக்காமல் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் காலம் தாழ்த்தியதால், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார்.

மேலும் பாலியல் தொல்லை கொடுத்த கற்பகக் கனி மீது திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுக்காததால், குழந்தை நலகுழு எண்ணிற்கு பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி புகாரளித்துள்ளார். அந்த சிறுமி குழந்தை நல குழு அதிகாரிகளிடம் பேசிய ஆடியோவும் வெளியாகி வைரலானது. 

இந்நிலையில் தாம்பரத்தில் பதுங்கி இருந்த கற்பகக் கனியை, திருமங்கல அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தாயாரின் இரண்டாவது கணவர் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.