யூ-டியூப் மூலம் வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை இறந்தநிலையில், பிரசவம் பார்த்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம், நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (32). மரச்செக்கு மூலம் எண்ணெய் தயாரித்து லோகநாதன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் இயற்கை மற்றும் மரபுவழி ஆர்வமுடையவர் என்று கூறப்படுகிறது. 

இவருக்கும் கோமதி (28) என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.   இதையடுத்து கோமதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கோமதிக்கு கடந்த 13 ஆம் தேதி பிரசவம் பார்க்க மருத்துவர்கள் நாள் குறித்துள்ளனர். 

ranipet husband wife delivery child death

மருத்துவர்கள் தேதி குறித்த நாளில் பிரசவ வலி ஏற்படமால் தள்ளிப்போன நிலையில் கடந்த 18 ஆம் தேதி மாலை கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் இயற்கை மற்றும் மரபுவழி ஆர்வலரான லோகநாதன் தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்க நினைத்துள்ளார். 

இதையடுத்து லோகநாதன் தனது அக்கா கீதாவின் உதவியுடன் சமூகவலைத்தளமான யூ-டியூபை பார்த்து வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
இதில் பெரும் சிரமத்திற்கு மத்தியில் கோமதிக்கு பிரசவமானது. 

ஆனால் மனைவியின் வயிற்றிலிருந்த பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. பிரசவம் ஆன நிலையில் தொடர்ந்து கோமதிக்கு அதிக அளவு இரத்தப் போக்கு ஏற்பட்டு மயங்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த லோகநாதன் தனது மனைவி கோமதியுடன், இறந்த ஆண் குழந்தையையும் புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு லோகநாதன் அழைத்து சென்றுள்ளார். அங்கு கோமதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

ranipet delivery

இதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கோமதிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

குழந்தை இறப்பு குறித்து மாவட்ட சுகாதாரத் துணை இயக்குனர் மணிமாறன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக புன்னை ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் மோகன், நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அதன்பேரில் லோகநாதனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணை முடிவில் லோகநாதனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். யூ-டியூப்பை பார்த்து பிரசவம் செய்வது குற்றம் என்று தெரிந்தும் வேண்டுமென்றே அதனை செய்தல் என்பது தொடர்பாக லோகநாதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

வீட்டில் பிரசவம் பார்க்க உதவிய லோகநாதன் அக்கா கீதாவிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகக்தில் சமீபகாலமாக யூ-டியூப் மூலம் இதுபோல் பிரசவம் பார்த்து பல உயிரிழப்புகள் ஏற்பட்டதை நாம் கண்கூடாக பார்த்து வரும் நிலையிலும் சிலர் இன்னும் மாறாமல் உள்ளனர்.

பிரசவத்தை முறையாக கையாளாமல் இப்படி தேவைற்ற செயலில் இறங்கியதால் பரிதாபமாக ஒரு உயிர் பிரிந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.