தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். முன்னதாக நடிகை ஜோதிகா உடன் இணைந்து நடித்த “உடன்பிறப்பே” கடந்த அக்டோபரில் அமேசான் பிரைம்-ல் வெளியானது. தொடர்ந்து சத்யராஜ் உடன் இணைந்து நடித்த “எம்ஜிஆர் மகன்” கடந்த நவம்பரில் தீபாவளி வெளியீடாக ரிலீசானது.

தொடர்ந்து அதே நவம்பரில் “ராஜவம்சம்” திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது. இந்த வரிசையில் அடுத்ததாக, இயக்குனர் அனிஸ் இயக்கத்தில் “பகைவனுக்கு அருள்வாய்”, மற்றும் N.V.நிர்மல் குமார் இயக்கத்தில் “நா நா” ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

இதனிடையே இயக்குனர் சசிகுமார் நடிக்கும் அடுத்த புதிய திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு தற்போது வெளியானது. பிரபல தயாரிப்பு நிறுவனமான செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்தில் சசிகுமார் உடன் இணைந்து விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் ராஜா பட்டசர்ஜி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். 

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டைட்டில் &  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற டிசம்பர் 23-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் பாடல் மற்றும் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.