அரக்கோணம் அருகே யூ-டியூப் பார்த்து பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த செய்தியறிந்து வேதனை அடைந்ததாக அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம், நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (32). அதேப்பகுதியில் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் செய்து வரும் இவருக்கு, கோமதி (28) என்ற பெண்ணுடன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 

இந்நிலையில் கர்ப்பமுற்ற கோமதிக்கு கடந்த 13 ஆம் தேதி பிரசவம் பார்க்க மருத்துவர்கள் நாள் குறித்துள்ளனர். இதையடுத்து குறிப்பிட்ட நாளில் மனைவிக்கு பிரசவ வலி வராத நிலையில், கடந்த 18 ஆம் தேதி மாலை கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

மனைவிக்கு பிரசவ வலி வந்ததை அடுத்து லோகநாதன் மருத்துவமனையில் சேர்க்காமல், தனது அக்கா கீதாவின் உதவியுடன் யூ-டியூபை பார்த்து அதன்படி பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

இதில் இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து மனைவிக்கு அதிக அளவு இரத்தப் போக்கு ஏற்பட்டு மயங்கிய நிலையில், லோகநாதன் தனது அக்கா உதவியுடன் மனைவி மற்றும் இறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். 

ranipet death

அங்கு கோமதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் கோமதியை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

கோமதி அங்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் குழந்தை இறப்பு குறித்து மாவட்ட சுகாதாரத் துணை இயக்குனர் மணிமாறன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் புன்னை ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் மோகன், நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அதன் அடிப்படையில் யூ- டியூப் மூலமாக மனைவிக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுவது குறித்து லோகநாதனிடம் நெமிலி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் “மகப்பேறு பார்ப்பது ஒரு சாகசம் என்பது போன்ற விஷமப் பிரச்சாரம் சமூக ஊடகங்களில் செய்யப்படுகிறது.  அவற்றை மக்கள் நம்பக் கூடாது. இது தொடர்பாக தமிழ்நாடு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியட்டுள்ள பதிவில், 'அரக்கோணம் பனப்பாக்கத்தில் இளம்பெண்ணுக்கு அவரது கணவர் யூ-ட்யூப் பார்த்து பிரசவம் பார்த்ததாகவும், அதில் குழந்தை இறந்ததுடன், தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் வெளியான செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.

மகப்பேறு என்பது மிகவும் சிக்கலான, சிறிய தவறு நடந்தாலும் தாய்க்கும், சேய்க்கும் உயிரிழப்பை ஏற்படுத்தி விடக் கூடிய விஷயமாகும். யூ-ட்யூபை பார்த்து கணவரே செய்வதற்கு அது ரசம் வைப்பதோ, நூடுல்ஸ் செய்வதோ அல்ல. மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது.

anbumani ramadoss

நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. 108 தொலைபேசியில் அழைத்தால் அவசர ஊர்தியில் வீட்டுக்கே வந்து பெண்ணை அழைத்துச் சென்று மகப்பேறு பார்த்து மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து விடும் வசதியை நான் மத்திய அமைச்சராக இருந்தபோதே ஏற்படுத்தியுள்ளேன்.

மருத்துவமனையில் மகப்பேறு பார்த்துக் கொள்ளும் பெண்களுக்கு வேறு பல உதவிகளும் வழங்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவமனையில் மருத்துவர்களால் செய்யப்படும் மகப்பேறு தான் பாதுகாப்பானது என்பதை உணர வேண்டும்.

யூ-டியூப் மூலம் மகப்பேறு பார்ப்பது ஒரு சாகசம் என்பது போன்ற விஷமப் பிரச்சாரம் சமூக ஊடகங்களில் செய்யப்படுகிறது.  அவற்றை மக்கள் நம்பக் கூடாது. இதுதொடர்பாக தமிழ்நாடு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.