சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக பிரபல மாலின் சீலிங் ஒன்று இடிந்து விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

vr mall damage

சென்னையில் நேற்று  காலை முதல் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சென்னை மாநகர் புறநகர் பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதியுற்றனர்.  குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

மேலும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து சென்னையில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் நேற்று பிற்பகலில் இருந்து கன மழை கொட்டியதால் பல இடங்களில் மழைநீர் கொட்டியது. இந்த திடீர் மழைக்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: வளிமண்டலத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடல் பகுதியில் காலை வரை இருந்து வந்தது. அது குறைந்த நேரத்தில் நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது. அப்போது திரள் மேகக் கூட்டங்கள் சென்னை பகுதியில் இருந்த காரணத்தால் இந்த திடீர் கன மழை கொட்டியது. இந்த திரள் மேகக்கூட்டங்கள் வலுவிழக்கும் வரை சென்னைக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் 6 அடுக்குகள் கொண்ட பிரபல மால் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மாலில் 250-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் 10 திரைகள் கொண்ட திரையரங்கம் உள்ளது. இந்த மாலிற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வதுண்டு. குறிப்பாக மாலின் மேற்கூரை இரும்பு பைப்புகள் தாங்கி இருக்கக்கூடிய கண்ணாடியால் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் நேற்று மாலை முதல் பெய்து வரும் கனமழையினால் மாலின் பால் சீலிங் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் மாலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.