சென்னையில் 'திடீர்' மழைக்கான காரணம் என்ன?
திரள் மேகக் கூட்டங்கள் சென்னை பகுதியில் இருந்த காரணத்தால் இந்த திடீர் கன மழை கொட்டியது.
தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில் சென்னையில் நேற்று மதியத்தில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. திடீரென பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
Occurrence of 200 mm rainfall events in Chennai City (Nungambakkam station) has increased in the last 35 recent years.
The years shaded are ones having two 200 mm events in year. pic.twitter.com/fDCnwIXMwH— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) December 31, 2021
சென்னையில் நேற்று காலை முதல் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சென்னை மாநகர் புறநகர் பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதியுற்றனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
மேலும் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து சென்னையில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் நேற்று பிற்பகலில் இருந்து கன மழை கொட்டியதால் பல இடங்களில் மழைநீர் கொட்டியது. இந்த திடீர் மழைக்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: வளிமண்டலத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடல் பகுதியில் காலை வரை இருந்து வந்தது. அது குறைந்த நேரத்தில் நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது. அப்போது திரள் மேகக் கூட்டங்கள் சென்னை பகுதியில் இருந்த காரணத்தால் இந்த திடீர் கன மழை கொட்டியது. இந்த திரள் மேகக்கூட்டங்கள் வலுவிழக்கும் வரை சென்னைக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சென்னையில் தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நேற்று மாலையில் நிர்வாக ரீதியாக வழங்கப்படும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. மொத்தத்தில் சென்னையில் இது எதிர்பாராத மழை என்றே ஆய்வு மைய அதிகாரிகள்தெரிவித்தனர்.