தமிழ் திரையுலகில் புதிதாய் கால் பதித்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். இவர் இயக்கிய முதல் திரைப்படம் ராக்கி. இந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இந்த படத்தின் கதைக்கரு, படத்தில் நடித்திருக்கும் பாத்திரங்களால் படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவியது. அடுத்த எந்த மாதிரி படத்தை இயக்கப்போகிறார் என்ற ஆவல் ரசிகர்களிடையே இருந்தது. நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் இவரது இரண்டாம் படத்தில் கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் இயக்குனர் செல்வராகவன்.

சாணிக் காயிதம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கவுள்ளதாக இந்தப் படத்தினை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சாணிக் காயிதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் படத்தொகுப்பு பணிகள் மேற்கொள்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்கிறது. போஸ்டரில் இருவரின் முகத்தில் ரத்த காயங்கள் உள்ளது. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக இருக்குமா என்ற ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். 

தற்போது படக்குழுவினருடன் திரைக்கதையைப் படிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அருண் மாதேஸ்வரனின் முழுத் திரைக்கதையையும் படித்துவிட்டு இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அருண் மாதேஸ்வரனின் திரைக்கதையை இப்போதுதான் அவருடன் படித்து முடித்தேன். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அசாதாரணமாக இருக்கிறது.

இவ்வாறு செல்வராகவன் தெரிவித்துள்ளார். சாணிக் காயிதம் படத்தில் நடித்து முடித்துவிட்டு, தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளாராம் செல்வராகவன். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராக்கி. இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இன்னும் வெளியாகாத இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் சமீபத்தில் கைப்பற்றினர்.