மூன்று மாதத்துக்கு முன் இறந்தாக கருதப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட முதியவர், உயிரோடு திரும்பியதால் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் தும்கூர் நகர் அடுத்து உள்ளது சிக்கமாலூர் கிராமம். இந்த  கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜப்பா. 70 வயதான இவர் 13 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போயிருந்தார். பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வரும் தனது  இரண்டாவது மகள் நேத்ராவதி வீட்டிற்கு சென்றிருக்கிறார். 

இதனால் நாகராஜப்பாவின் மகள் இன்ப அதிர்ச்சி அடைந்த நிலையில், மகளின் வீட்டிலேயே தங்கி இருந்தபடி மருத்துவமனையில் சிறு வேலைகளை நாகராஜப்பா செய்து வந்திருக்கிறார். வழக்கமாக தனது பணிகளை மகள் வீட்டிலிருந்து செய்துவந்த நாகராஜப்பா மீண்டும் 3 மாதத்திற்கு முன்னர் காணாமல் போய்விட்டார். 

இந்நிலையில் செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று நாகராஜப்பாவின் மகள் பணிபுரிந்து வரும் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அடையாளம் தெரியாத உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 

தனது தந்தை நாகராஜப்பா காணாமல் போன நிலையில், அடையாளம் தெரியாத உடல் அவரது தந்தையின் உடலாக இருக்குமோ என்ற சந்தேகத்தில்  நாகராஜப்பாவின் மகள் அந்த உடலை காணச் சென்றார். 

buried man karnataka

பின்னர் தனது தந்தை நாகராஜப்பாவின்  உடல் அடையாளங்களுடன் ஒத்து போனதால் அவரது தந்தை தான் என்று செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் நேத்ரா உறுதிப்படுத்தியதை அடுத்து அந்த நாகராஜப்பா என்று அடையாளம் காணப்பட்ட உடலை செவிலியர் நேத்ரா பெற்றுக் கொண்டார்.

இதன்பின்னர் சொந்த ஊருக்குச் சென்று நாகராஜப்பா என்று அடையாளம் காணப்பட்ட உடலை, அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்து உள்ளனர். 

மேலும் நாகராஜப்பாவுக்கு காரியம் நடத்தி முடித்து வீட்டில் அவரது போட்டோ பிரேம் போட்டு மாலையும் மாட்டப்பட்டுவிட்டது. இந்த சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.

இந்நிலையில் நேற்று காலையில் சிக்கமாலுருக்கு நாகராஜப்பா சென்றிருக்கிறார். பேருந்தில்  இருந்து இறங்கிய அவரை கிராமத்தினர் ஒருவித பயத்துடன் பார்த்திருக்கிறார்கள். அவரிடம் பேசுவதற்கு பயந்து கிராம மக்கள் அனைவரும்  ஓரத்திலேயே நின்று வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். சில பேர் நாகராஜப்பாவை பார்த்து ஓடி ஒளிந்துள்ளனர்.

buried man karnataka

தன்னை மற்றவர்கள் வித்தியாசமாக பார்ப்பதை உணர்ந்த நாகராஜப்பா தனது வீட்டிற்கு சென்றுள்ளார். உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், திடீரென நாகராஜப்பாவை பார்த்ததும், அவரது குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். 

அதன்பிறகு தான் தான் இறந்ததாகச் சொல்லி வேறொருவரை அடக்கம் செய்த விபரம் நாகராஜாப்பாவுக்கு தெரியவந்துள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான நாகராஜப்பா மகளிடம் சொல்லாமல் 3 மாதத்திற்கு முன்னர் சென்றிருக்கிறார். 

பல இடங்களில் சுற்றித் திரிந்த நாகராஜப்பா கிடைக்கும் வேலைகளை செய்து சாப்பிட்டு வந்துள்ளார் . தற்போது குடும்பத்தினரின் ஞாபகம் வர மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கிறார். இதுகுறித்து அவரிடம் விசாரித்ததில் வழிதவறி அத்திபள்ளி அருகே சென்றதாகவும் திரும்பிவர பணம் இல்லாததால், கூலிவேலை செய்து சாப்பிட்டு வந்ததாகவும் நாகராஜப்பா தெரிவித்துள்ளார்.

நாகராஜப்பா உயிருடன் இருக்கிறார் என்றால், தற்போது  நாகராஜப்பா என்று நினைத்து அடக்கம் செய்தது யாருடைய உடல் என்ற சந்தேகம் தற்போது எழுந்திருக்கிறது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.