தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்- 2021, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன்  கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. ஆளுநர் உரை நடந்தபோது எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத்தலைவர் துரைமுருகன் ஆகியோர் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்கட்சியினர் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘’ திமுக சார்பாக முதலமைச்சர், துணைமுதலமைச்சர், அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக 97 பக்க அறிக்கையை ஆளுநரிடம் கொடுத்தோம். மேலும் 7 பேர் விடுதலை தொடர்பாகவும் ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளுநரின் செயலை கண்டித்து உரையை புறக்கணித்துள்ளோம்.

மத்திய அரசு தமிழகத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியதாக ஆளுநர் தெரிவிக்கிறார். ஆனால் 2015ம் ஆண்டு பட்ஜெட்டில் மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு வெளியாகியது. அதன்பின்பு 2019ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி ஒரு  நாடகம் நடத்தினார் பிரதமர் மோடி. 2021 வந்ததும் இதுவரை ஒரு செங்கலை கூட நடவில்லை. ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பக்கபலமாக இருக்கிறார். 
தமிழர்களின் பிரச்சனையை குறித்தும் , ஊழல் குறித்தும் பேச வாய்ப்பு தரப்போவதில்லை மேலும் நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை. அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம்” என்றார்.