இந்தியாவில் புதிதாக இருமுறை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளதால், பொது மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

ஏற்கனவே தமிழகம் உட்பட நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதாக அனைத்து தரப்பு மக்களும் பீதியில் உரைந்து உள்ளனர்.

இப்படியான சூழ்நிலையில், “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது உண்மை என்றாலும், இரண்டாவது அலை என்று கூறமுடியாது” என்று, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தான், “இந்தியாவில் புதிதாக இருமுறை உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் காணப்படும் கொரோனா வைரஸ் வகைகளை மரபணு வரிசைப்படுத்தி ஆய்வு செய்வதற்காக, 10 தேசிய ஆய்வுக்கூடங்கள் கொண்ட குழுமத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதம் உருவாக்கியது” என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது.

“இந்த ஆய்வுக்கூடங்களில் கொரோனா வகைகளை மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வு நடந்து வருகிறது” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அத்துடன், “மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அனுப்பி வைத்த 10 ஆயிரத்து 787 கொரோனா உறுதி செய்யப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன என்றும், அதில் இது வரை 771 உருமாறிய கொரோனாவை இன்சாகாக் குழுமம் கண்டுபிடித்து உள்ளது” என்றும், கூறப்பட்டு உள்ளது. 

“இவற்றில், 736 மாதிரிகள், இங்கிலாந்தைச் சேர்ந்த உருமாறிய கொரோனாவை சேர்ந்தவை என்றும், 34 மாதிரிகள் தென் ஆப்பிரிக்க உருமாறிய கொரோனாவையும், ஒரு மாதிரி பிரேசில் உருமாறிய கொரோனாவையும் சேர்ந்தவை” என்றும், அதில் சுட்டக்காட்டப்பட்டு உள்ளது. 

மேலும், இந்தியாவைப் பொறுத்த வரையில், கிட்டத்தட்ட 18 மாநிலங்களில் இந்த உருமாறிய கொரோனாக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளன. 

அதே நேரத்தில், “சர்வதேச பயணிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகிறார்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளிலும் மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வு நடந்து வருகிறது. 

இப்படியாக, மாநிலங்கள் அனுப்பி வைத்த மாதிரிகளில், புதிதாக ‘இருமுறை மரபணு உருமாறிய கொரோனா’  தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளன. 

“இந்த வகை கொரோனா என்ன செய்யும் என்றால், நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டுப்படாதவையாக இருக்கும் என்றும், நோய் தொற்றை இன்னும் அதிகப்படுத்தக்கூடியவை” என்றும், ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “15 முதல் 20 சதவீத மாதிரிகளில் இந்த வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்றும், இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனாக்களுடன் இந்த புதிய வகை கொரோனா ஒத்துப்போகாமல் இருப்பதாகவும், இவை புதிய ரகமாக காணப்படுகின்றன” என்றும், ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

முக்கியமாக, “மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இவை கண்டறியப்பட்டுள்ளன என்றும், வெளி நாடுகளை பொறுத்த வரையில் சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, டென்மார்க் உள்பட 16 நாடுகளிலும் இவை கண்டறியப்பட்டுள்ளன” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், “இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததற்கு இந்த மரபணு உருமாறிய கொரோனாக்கள் தான் காரணம் என்பதனை 

நிரூபிக்க போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை” என்றும்,  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.