1980-களில் இந்தியாவுக்காக விளையாடிய கபடி வீரரின் உண்மைக் கதையை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லும் திரைப்படமான ‘அர்ஜுன் சக்ரவர்த்தி’ வேகமாக வளர்ந்து வருகிறது. வேணு கே சியின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை கன்னெட் செல்லுலாய்டு நிறுவனத்திற்காக ஸ்ரீனி குப்பலா தயாரிக்கிறார்.

புதுமுகங்களான விஜய ராம ராஜூ மற்றும் சிஜா ரோஸ் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்கும் படத்தில், அஜய், தயானந்த் ரெட்டி, அஜய் கோஷ் மற்றும் துர்கேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

“இரண்டு வருடங்களுக்கு முன் ‘அர்ஜுன் சக்ரவர்த்தி’-க்கான பணிகள் தொடங்கிய நிலையில், 75 சதவீத படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஜம்மு & காஷ்மிர் உள்ளிட்ட நாடு முழுவதுமுள்ள 125 இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது,” என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

குழந்தைப் பருவம் முதல் நடுத்தர வயது வரையிலான தோற்றத்தை சரியாக வெளிப்படுத்துவதற்காக பல்வேறு உருவ மாற்றங்களுக்கு கதாநாயகன் தன்னை உட்படுத்திக் கொண்டிருக்கிறார்.

மேலும், கடந்த காலத்தை மிகச்சரியாக பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக 1960 மற்றும் 1980-களில் இருந்த கிராமங்கள் மற்றும் ஹைதராபாத் நகரம் ஆகியவை கலை இயக்குநர் சுமித் படேல் தலைமையிலான குழுவால் பெரும் பொருட்செலவில் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆராய்ச்சி மற்றும் பணிகளுக்காக மட்டுமே இரண்டு ஆண்டுகள் செலவிடப்பட்டுள்ளன.

‘அர்ஜுன் சக்ரவர்த்தி’ திரைப்படத்தை பற்றி மிகவும் நம்பிக்கையுடன் பேசும் குழுவினர், உண்மைக் கதை, அது படமாக்கப்பட்டுள்ள விதம், இசை மற்றும் கதாபாத்திரங்கள் ஆகியவை ரசிகர்களின் மனங்களை கட்டாயம் கவரும் என்று கூறுகின்றனர்.

தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வரும் ‘அர்ஜுன் சக்ரவர்த்தி’-யை இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்து இந்தியா முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.