இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி தம்பதிக்கு லீலாவதி என்கிற மகளும், ஓம்கார் என்கிற மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் கீதாஞ்சலி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் குட் நியூஸை புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டு கூறினார். அவரது பதிவில், மூன்றாவது குழந்தை...லீலாவதி, ஓம்கார், செல்வராகவன் மற்றும் நான் ஜனவரி ரிலீஸுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அழகான ஆண் குழந்தையை வரவேற்றுள்ளனர் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி தம்பதியினர். செல்வராகவனின் செல்ல மகனுக்கு ரிஷிகேஷ் என்ற பெயர் வைத்துள்ளனர். தாயும் சேயும் நலமாக உள்ளனர். இந்த சுவையூட்டும் செய்தியை கீதாஞ்சலி செல்வராகவன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்தார். இவர்களுக்கு திரை ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

கடந்த 2011-ம் ஆண்டு செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலிக்கு திருமணம் நடந்தது. செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் படத்தில் கீதாஞ்சலி உதவி இயக்குனராக பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-ம் ஆண்டு மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தை இயக்கியிருந்தார் கீதாஞ்சலி. 

சிறந்த இயக்குனரான செல்வராகவன், நடிகராகவும் களமிறங்கவிருக்கும் செய்தியை அறிவித்தார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் சாணிக் காயிதம் படத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார் செல்வா. இந்த செய்தி சினிமா பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது. யாமினி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம் செய்யும் இந்த படத்திற்கு நாகூரான் எடிட்டிங் செய்யவிருக்கிறார். 

சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்த தகவலை வெளியிட்டார் செல்வா. தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. குழந்தையை வரவேற்ற செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா. இந்த அழகான உலகிற்கு வந்திருக்கும் ரிஷிகேஷ் செல்வராகவனுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.