கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றதை , ட்ரம்ப் ஏற்றுக்கொள்ள மறுத்து வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வரும் முன்பே , அமெரிக்க தேர்தல் ஆணையம் ஜோ பைடனின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 


இரு அவையின் கூட்டுக் கூட்டத்தில், தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில், ஜோ பைடனை அதிபராக அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது  "அமெரிக்கா. அமெரிக்கா" என முழக்கமிட்டபடி, அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்புகளை கீழே தள்ளிவிட்டும் உடைத்துக் கொண்டு ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்துக்குள் புகுந்தனர். "என்னை மிதிக்க வேண்டாம்" என்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட கொடிகளையும் கைகளில் ஏந்தியபடி வந்திருந்தவர்கள், ஜோ பைடனை அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


ஆதரவாளர்கள் கலவரத்தை ஏற்படுத்தியதால் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.  பின்னர் அப்பகுதியில் பைப் வெடிகுண்டு வீசப்பட்டதாகவும், பல முறை துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறியதை அடுத்து காவல்துறையினர் துப்பாக்கிச்சுடு நடத்தினர். இ்தில் ஒரு பெண் மீது குண்டு பாய்ந்தது. படுகாயமடைந்த அந்தப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இதனால் ஜோ பைடனை அதிபராக அறிவிக்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டு, துணை அதிபர் மைக் பென்ஸ் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் நுழைவுவாயில்கள் அனைத்தும் மூடப்பட்டு, பூட்டப்பட்டது.