டெல்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ் ஆகுமா? என்பது குறித்து இறுதி முடிவு இன்று அதிகாரப்பூர்வகமாக அறிவிக்கப்படவுள்ளது.

farmers

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 19-ம் தேதியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு  உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி  2014-ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறோம். விவசாயிகளின் வேதனைகளை அறிந்தவன் என்பதால் தான், அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். மேலும் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார் .

மேலும் சரியான விதைகள், உரம், பயிர்க் காப்பீடு என சிறு விவசாயிகளுக்கான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது எனவும் பயிர் சேதத்திற்காக விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார் .

மேலும்  வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற சந்தைகளையும் வலுப்படுத்தி உள்ளோம். விளை பொருட்களுக்கான நியாயமான விலையை தற்போது விவசாயிகள் பெற்று வருகின்றனர். விவசாயிகளின் நலனுக்காகவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 3 வேளாண் சட்டங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது என  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் .

வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை.  எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இந்த மாதம் தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான நடைமுறையை தொடங்குவோம். விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்துவதற்காக கூடியுள்ள விவசாயிகள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தலைநகர் டெல்லியில் உள்ள எல்லை யில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் பயனாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டது.

அதனைதொடந்து போராட்டத்தை கைவிட்டு விவசாய அமைப்புகள் பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்தது. ஆனால் போராட்டத்தை வாபஸ் பெற மறுத்த விவசாய சங்கங்கள், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் குழு அமைத்து கடந்த சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே டெல்லியில் போராடும் விவசாய சங்கத்தலைவர் குல்வந்த் சிங் சந்து நேற்று கூறுகையில், நாங்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் கிட்டத்தட்ட நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது, இருப்பினும் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.