போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சசிகலா நேரில் சந்தித்து பேசினார்.

rajini sasikala

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா இந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளிவந்த உடன் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிக்கை வெளியிட்டார். ஆனால் அதன் பிறகு அவ்வப்போது தனது இருப்பை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கைகள், ஆடியோ டேப்புகள் வெளியீடு போன்றவற்றின் மூலம் சசிகலா பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். மேலும் தொடர்ந்து அ.தி.மு.க தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். அ.தி.மு.கவை மீட்பேன் என்று கூறிவருகிறார். 

சசிகலாவின் சிறைதண்டனைக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வருகின்றன. சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது தொடங்கி பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சசிகலாவை மையப்படுத்தி அதிமுகவில் விவாதங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன்  இல்லத்திற்கு நேரில் சென்று சசிகலா சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது மரியாதை நிமித்தமாக சந்திப்பு என கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து சசிகலா நலம் விசாரித்துள்ளார்.

மேலும் தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு சசிகலா வாழ்த்து தெரிவித்தார். ரஜினிகாந்த், சசிகலா இடையே ஒருமணி நேரத்திற்கும் மேல் இந்த சந்திப்பு நீடித்துள்ளது. இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உடன் இருந்துள்ளார்.