“பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்து படிக்கட்டில் பயணித்தால் அதன் ஓட்டுநர், நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
  
நேற்றைய தினம் கன்னியாகுமரியில் மூதாட்டி ஒருவரை பேருந்திலிருந்து நடந்துநர் இறக்கி விட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பேருந்து கண்டக்டர் மணிகண்டன், டிரைவர் மைக்கேல் மற்றும் நடந்த சம்பவத்தை அதிகாரிகளுக்கு தெரிவிக்காததால், அப்போது பேருந்து நிலையத்தில் நேர காப்பாளராக இருந்த ஜெயக்குமார் ஆகிய 3 பேரையும் உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் அரவிந்த் அதிரடியாக உத்தரவிட்டார்.

அதே நேரத்தில், “தமிழக அரசு பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகள் மற்றும் ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு தொங்கியபடியும் பயணம் செய்யும் வீடியோக்கள்” சமூக வலை தளங்களில் தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்தன.

சமீபத்தில் கூட, “திருவள்ளூர் மெய்யூர் பகுதியில் அரசுப் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி சாகசம் மேற்கொண்ட பள்ளி மாணவர்களின் வீடியோ” சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. 

அந்த மாணவர்களை அடையாளம் கண்ட பெரியபாளையம் போலீசார், “மாணவர்களின் பெற்றோர்களை நேரில் அழைத்து அறிவுரை கூறி” அனுப்பி வைத்தனர்.

அதன் தொடர்ச்சியாகவே, “தமிழக அரசு பேருந்துகளில் பள்ளி,  கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்ய போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை சில அறிவுரைகளை” வழங்கி இருக்கிறது.

அதன்படி, “தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

“பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பான முறையில் பேருந்தில் ஏறி இறங்குவதை உறுதி செய்த பின்பே பேருந்துகளை இயக்க வேண்டும்” என்றும், அறிவுறுத்தி உள்ளனர்.

அத்துடன், “பேருந்தில் போதிய இட வசதி ஏற்படுத்தி கொடுத்து படிக்கட்டில் நிற்காதாவாறு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

“மாணவர்கள் படிகட்டிகளில் நின்று பயணம் செய்யாதவாறு ஓட்டுனரும், நடத்துனரும் பணியாற்ற வேண்டும் என்றும், மாணவர்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கூடுதல் பேருந்துகளை இயக்க ஏதுவாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும்” போக்குவரத்துதுறை தெரிவித்து உள்ளது.

குறிப்பாக, “அரசு பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள், விபத்தில் சிக்குவதை தடுக்கவே போக்குவரத்துதுறை இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளதாகவும்”  தமிழக போக்குவரத்து துறை விளக்கம் அளித்து உள்ளது.