தஞ்சை அருகே பத்து  ஆண்டுகளாக உணவு கொடுக்காமல் வீட்டு சிறையில் மகன்களே பெற்ற தாயை வீட்டுக்குள் பூட்டி வைத்து சித்திரவதை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை காவிரி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் ஞானஜோதி அவரது வயது 70 ஆகும். இவரின் கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். கடந்த பத்து  ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவரும், மகள் ஒருவரும் உயிரிழந்து விட்டனர். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சண்முகசுந்தரம் சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், இளைய மகன் வெங்கடேசன் தொலைகாட்சி ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். ஆனாலும் மகன்களின் குடுபத்தினர் தஞ்சாவூரில் தான் வசித்து வருகினற்னர்.

இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இரு மகன்களும் சொத்து பிரச்சினையால் ஞானஜோதியை கவனிக்காமல் கைவிட்டனர். மேலும் அவரை ஒரு வீட்டில் வைத்து பூட்டி உள்ளனர். தொடர்ந்து வெளி உலகமே தெரியாமல் இருளில் வசித்ததால் ஞானஜோதிக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. உண்ண உணவு இல்லாமலும், கவனிக்க ஆள் இல்லாமலும் அனைத்து வித கஷ்டங்களும் அனுபவித்து வந்தார். சில நேரங்களில் அவரது மகன்கள் பிஸ்கட் வாங்கி கேட் வழியாக தூக்கி வீசி விட்டு சென்று வந்தனர். மற்றப்படி பெற்ற தாயை இரு மகன்களும் அருகில் இருந்து கவனிக்காமலும், உணவு கூட கொடுக்காமலும் வீட்டுக்குள் பூட்டி விட்டனர். இதனால் பல நேரங்களில் உணவு இல்லாமல் மூதாட்டி ஞானஜோதி வீட்டின் தரையை நோண்டி மண்ணை எடுத்து தின்ன ஆரம்பித்தார்.

ஞானஜோதியை சரிவர கவனிக்காததால் அவர் இதனால் எலும்பும் தோலுமாக மாறி விட்டார். அவ்வப்போது அப்பகுதி மக்கள் மூதாட்டிக்கு உணவு கொடுத்து வந்தனர். இது தொடர்பாக ஒருவர் சமூக நலத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகள் பார்த்தபோது மூதாட்டியின் உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக காட்சி அளித்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர்  தினேஷ்பொன்ராஜ், ஆலிவர் ஆகியோர் மூதாட்டியை மீட்கும் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டார். ஞானஜோதியை பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக ஞானஜோதியை முதியோர் இல்லத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டு மகன்கள் இருத்தும் பெற்ற தாயை சோறு போடாமல் அனாதையாக விட்ட அவலம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.