மதுரை சித்திரை திருவிழாவில், 2 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றதில், மதுரை மாநகரே குலுங்கியது.

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா, கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. 

அதே நேரத்தில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயிலின் உள்ளேயே பக்தர்கள் அனுமதியின்றி விழா நடைபெற்ற நிலையில், தற்போது கொரோனா முற்றிலுமாக குறைந்த நிலையில், இந்த ஆண்டு விழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால், மதுரை நகரமே தினம் தினம் விழாக்கோலம் பூண்டது இரவு நேரங்களில் வண்ண விழாக்குகளாலும், வான வேடிக்கையாலும் ஜொலித்தது.

அத்துடன், இந்த திருவிழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

குறிப்பாக, சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் வைபோகமானது, நேற்று முன் தினம் காலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து சித்திரைத் திருவிழாவின் 11 வது நாளான நேற்றைய தினம், மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.

இந்த தேரோட்டத்தில், சுந்தரேசப் பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மதுரை மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் பக்தர்கள் முன்பு எழுந்தருளினர். 

முக்கியமாக, சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளும் வைபோகம் இன்றைய தினம் நடைபெற்றது.

அதன் படி, கள்ளழகர் இன்று காலை பச்சைப்பட்டு உடுத்தி, தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளினார். 

கள்ளழகர் ஆற்றில் இறங்கியதும், பக்தி பரவசமடைந்த அங்கு திரண்டிருந்த ஒட்டுமொத்த பக்தர்களும் தண்ணீரை பீய்ச்சி அடித்து, பக்தி பரவசத்தில் ஆரவாரமடைந்தனர். 

அப்போது, பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி எழுந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தார். 

மிக முக்கியமாக, இந்த ஆண்டு கள்ளழகர் பச்சை பட்டுடன் எழுந்தருளியதால், இந்த ஆண்டு மக்களின் வாழ்கை பசுமையாகவும், வளமையாகவும் அமையும் என்பது பக்த கோடிகளின் பெரும் நம்பிக்கையாக இருக்கிறது.

கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளும் நிகழ்வு இன்று வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பொது மக்கள் கண்டுகளித்தனர். 

 கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபோகத்தால், பக்தர்களின் பெரு வெள்ளத்தில் மதுரை மாநகரமே இன்றைய தினம் குலுங்கியது குறிப்பிடத்தக்கது.